அரசியலில் சிந்தனை மாற்றம் அவசியம்

0
105

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான உரையாடல்களும் அதனை எதிர்க்கும் கருத்துகளும் ஒரு விடயத் தைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. அதாவது, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் புதிய அணுகுமுறைகளை பரிசோதிக்க அரசி யல்வாதிகள் அஞ்சி நடுங்குகின்றனர். அவர்களின் நடுக்கமும் தடுமாற்றமுமே எதிர்ப்பாகவும் – அவநம்பிக்கையாகவும் வெளிப் படுகின்றது. இது சரி வருமா- சாத்தியமா என்பதில் தொடங்கி இதற்கு பின்னால் யாரோ இருப்பதான கதைகள் வரையில் அனைத்துமே அரசியல்வாதிகளின் இயலாமையிலிருந்தே வெளிவருகின்றன.
தங்களின் இயலாமைகளை மறைத்துக் கொள்வதற்காக அவர்கள் பயன்படுத்தும் சொற்கள்தான். அவசரப்படக்கூடாது – நிதானமாக செயல்பட வேண்டும் – பொறுமையாக இருக்க வேண்டும் விடயங் களை முதலில் அவதானிக்க வேண்டும். கடந்த பதினைந்து வருடங்களாக இவ்வாறான சொற்கள்தானே மீண்டும் மீண்டும் கூறப்பட்டன. ஆனால், ஒரு சிறிய மாற்றத்தைக்கூட, இந்த அரசியல் தரப்புகளால் ஏற்படுத்த முடியவில்லையே – பின்னர் எந்த அடிப்படையில் மீண்டும் இவ்வாறான சொற்களுடன் பொது வெளிக்கு வருகின்றீர்கள்? கடந்த பதினைந்து வருடகால அரசியல் தோல்விகளுக்கு காரணமானவர்கள் எவ்வாறு புதிய நகர்வுகளை பிழையென்று கூற முடியும்?
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று சிவில் சமூக அமைப்புகள் கூறுகின்றபோது அதனை ஏன் எதிர்க்க வேண்டும்? அந்த முயற்சியை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதால் அரசியல் தலைவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோருக்கு என்ன பிரச்னை உண்டு? ஏன் அதனை எதிர்க்க வேண்டும்?
யுத்தத்துக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களில் மேற் கொள்ளப்பட்ட அனைத்து அரசியல் முன்னெடுப்புக்களும் – அந்த முன் னெடுப்புக்களுக்கான தீர்மானங்களும் சம்பந்தன் என்னும் ஒருவ ராலேயே மேற்கொள்ளப்பட்டது.
அவ்வாறான முடிவுகளின்போது, அதனை அமைதியாக அனுமதித்துக் கொண்டிருந்தவர்கள் என்னும் வகையில் பங்காளிக் கட்சிகள் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொறுப்பு உண்டு. இந்தக் காலத்தில் சிவில் சமூக அமைப்புகள், புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள் எனப் பலராலும் முன்வைக்கப்பட்ட எந்தவோர் ஆலோசனைகளையும் சம்பந்தன் தரப்பு கருத்தில் கொள்ளவில்லை. ஆகக் குறைந்தது செவிமடுப்பதற்கான ஆர்வத்தைக்கூட காண்பிக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கடந்த பதினைந்து வருட கால சம்பந்தனின் அனைத்து அரசியல் தீர்மானங்களும் படு மோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றது. பொதுவாக தமிழ் அரசியல் சூழலில் ஒரு பண்பு உண்டு.
தங்களின் தோல்விக்கு எவருமே பொறுப்பெடுப்பதில்லை. கேட்டால், நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்னும் இலகுவான பதிலுடன் விடயங்க ளுக்கு முற்றுபுள்ளியிட்டுக் கொள்வது உண்டு. ஏமாற்றப்படுகின்றீர் கள் – அவர்கள் ஏமாற்றத்தை மட்டுமே தருவார்கள் என்றால் – பின்னர் எதற்காக மீண்டும் ஏமாறுவதற்கு தயாராக இருக்கின்றீர்கள் – தமிழ் மக்களையும் ஏமாறுமாறு கூறுகின்றீர்கள்? இன்று தமிழ் மக்களுக்கு தேவையான அரசியல் என்பது முன்னை யதை அப்படியே பிரதி செய்யும் அரசியல் அணுகுமுறையல்ல.
மாறாக, புதிய சூழலுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய அரசியலுக்கு புதிய இரத்தம் பாய்ச்ச வேண்டியிருக்கின்றது. ஜனநாயக சூழலுக்கு ஏற்ப தமிழர் அரசியலை செப்பனிட வேண்டியிருக்கின்றது. அடிப்படையில் ஒரு சிந்தனை மாற்றம் தேவைப்படுகின்றது.