இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் காலமானதைத் தொடர்ந்து அவரின் இடத்தை நிரப்பப் போவது யார் என்னும் கேள்வி எழுகின்றது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாது போனால் அவரின் இடத்துக்கு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர் நியமிக்கப்படுவார்.
இது ஒரு பாராளுமன்ற வெற்றிடத்தை நிரப்பும் சாதாரண விடயம். ஆனால், அரசியலில் செல்வாக்கு செலுத்திய ஒருவர் காலமாகும்போது, அவரின் இடத்தை இன்னொருவர் சாதாரண மாக நிரப்பிவிட முடியாது. இரா.சம்பந்தன் திருகோணமலை தமிழர் அரசியலில் மூன்று தாசாப்தங்களாக செல்வாக்குச் செலுத்தியவர். குறிப்பாக, 2009இற்கு பின்னரான தமிழர் அரசி யலை தீர்மானித்த ஒருவர்.
ஆனால், அவரால் ஒரு தனித்துவமான அரசியல் மரபை உருவாக்குவதில் வெற்றி காண முடியவில்லை. இந்த இடத்தில் அவரின் இடத்தை நிரப்பக்கூடியவர் யார் என்னும் கேள்வி எந்தளவு பொருத்தமானது என்னும் கேள்வியுண்டு. சம்பந்தன் ஒரு சட்டத்தரணி. ஆங்கிலத்தில் விடயங்களை முன்வைப்பதில் கெட்டித்தனமானவர்.
இப்படியான தகுதியுள்ள ஒருவரால் அவரின் இடத்தை நிரப்ப முடியுமல்லாவா என்னும் கேள்வியை ஒருவர் முன்வைக்கலாம். அப்படி நோக்கும்போது, எம். ஏ. சுமந்திரன்தானே பொருத்தமானவர் என்னும் பதிலையும் சிலர் முன்வைக்கலாம். இங்கு விடயம் சட்டப்புலமையோ, ஆங்கிலமோ அல்ல. மாறாக, எவ்வாறானதோர் அரசியல் பாதையை ஒருவர் தமிழ் மக்களுக்கு விட்டுச் செல்கின்றார் என்பதுதான்.
ஒருவர் விட்டுச் செல்லும் இடத்திலிருந்துதான் அதனை இன்னொருவர் தொடர முடியும். ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தியவர்கள் என்று நோக்கப்படும் அனைவருமே அரசியலில் பேருந்தை தவறவிட்டவர்கள்தான். இவ்வாறு பேருந்தை தவற விடுபவர்களின் இடத்தை எதற்காக இன்னொருவர் நிரப்ப வேண்டும். எனவே, அரசியலில் வெற்றிடங்கள் என்பது சரியான தொரு பார்வைதானா? அரசியலில் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல. மாறாக, அரசியலை சரியானவர்கள் – ஆற்ற லுள்ளவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விடயங்களை வெற்றிகரமாக முன்னெடுக்கக் கூடியவர்களே அரசியலை வழிநடத்த வேண்டும்.
அவ்வாறானவர்களாலேயே வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும். கடந்த எழுபத்தைந்து வருடங்களில் பலர் வந்து சென்றிருக்கின்றனர். அவ்வாறானவர்களில் பலர் தங்களின் ஆளுமைகளால் தமிழர் அரசியலை புரட்டிப்போடக் கூடியவர்களென்றே நம்பப்பட்டது.
ஆனால், அவர்களின் ஆளுமையால் இதுவரை தமிழர் அரசியலில் ஒரு சிறிய அடைவைக்கூட அடைய முடியவில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாகக் கிடைக்கப்பெற்ற, அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைக்கூட முழுமையாக அமுல்படுத்த முடியவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் தோற்றுப்போனவர்களின் அரசியல் வெற்றிடங்களை நிரப்புவதில் என்ன பயனுண்டு? வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – எவ்வாறானவர்களால் என்றால், காலமானவரின் தோல்விகளை சரிசெய்யும் ஆற்ற லுள்ளவர்களால் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.