அரசியல் தீர்வு – இது ஒரு வசீகர கோஷமாக தொடர்கின்றது.
ஆனால், இன்றுவரையில் அதனைத் தமிழர்களால் எட்டித் தொட முடியவில்லை.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் தொட்டுவிடுவதாக சொல்லப்பட்டாலும்கூட, இன்றுவரையில் கட்சிகள் உச்சரித்த அரசியல் தீர்வானது தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஓர் எட்டாக் கனியாகவே இருக்கின்றது.
அது இனியும் ஓர் எட்டாக் கனியாகத்தான் இருக்கப் போகின்றது? 1949இல், இலங்கை தமிழ் அரசுக் கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் – சமஷ்டி அரசியல் தீர்வை ஓர் இறுதி இலக்காகக் கொண்டிருந்தாலும்கூட, அதன் நடைமுறை சாத்தியப்பாடு தொடர்பில் அவர் ஐயம் கொண்டிருந்திருந்தார்.
அவர் ஐயம் கொண்டிருந்தார் என்று கூறுவதற்கு வலுவான காரணம் உண்டு.
அவர் அவ்வாறு ஐயம் கொண்டிருக்காவிட்டால், பண்டா – செல்வா மற்றும் டட்லி – செல்வா உடன்பாட்டுக்கு சென்றிருக்க மாட்டார்.
மேற்படி இரண்டு உடன்பாடுகளும் சமஷ்டி கோரிக்கையை அடைவதற்கான உடன்பாடுகள் அல்ல. மிகவும் குறைவானதொரு தீர்வை நோக்கியே அவர் சென்றிருந்தார்.
ஏன்? ஏனென்றால் சமஷ்டி தீர்வை ஒரு தனிப் பாய்ச்சலில் அடைய முடியுமென்று செல்வநாயகம் நம்பியிருக்கவில்லை.
செல்வநாயகம் தொடர்பான சுயசரிதையை எழுதியிருந்த அவரின் மருமகன் பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் இதனை குறிப்பிட்டிருக்கின்றார்.
ஒரு தனிப்பாய்சலில் அனைத்தையும் அடைய முடியுமென்று அவர் நம்பியிருக்கவில்லை என்றும் முதலில் கிடைப்பதை எடுத்துக் கொண்டு முன்னேறும் உபாயம் தொடர்பிலேயே செல்வநாயகம் நம்பிக்கை கொண்டிருந்தார் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதாவது, பாண் கிடைக்கவில்லை என்பதற்காக கேக்கை நிராகரிக்கும் வறட்டுத்தனமான தலைவராக செல்வநாயகம் ஒருபோதும் இருந்ததில்லை.
இந்த அடிப்படையில்தான் அரசியல் தீர்வு தொடர்பான செல்வநாயகத்தின் அணுகுமுறையை நாம் நோக்க வேண்டும்.
இந்தப் பின்புலத்தில் இன்றைய அரசியல் சூழலை உற்று நோக்கினால் அரசியல் தீர்வுக்கான பயணம் மிகவும் சிக்கலானது.
தமிழ்த் தேசிய கட்சிகள் என்போர் தேர்தல் மேடைகளில் உச்சரித்துக் கொண்டிருக்கும் சமஷ்டி, ஒரு நாடு இரு தேசம் என்னும் அடிப்படையிலான அரசியல் தீர்வு மற்றும் இப்போது சிலர் உச்சரிக்கும் இடைக்கால கட்டமைப்பு எவையுமே தற்போதைக்கு சாத்தியமானவையல்ல.
ஏனெனில், அதற்கு சாதகமான அரசியல் சூழல் தற்போதில்லை.
ஒருவேளை எதிர்காலத்தில் அவ்வாறானதொரு சூழல் வரவும்கூடும் – வராமலும் போகலாம்.
ஆனால், தற்போதைய நிலையில் தமிழ் மக்களுக்கு ஓரளவு சாதகமாக இருக்கின்ற வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டு, முன்நோக்கி பயணிப்பது தொடர்பில்தான் தமிழ் தரப்புக்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த பின்புலத்தில் நோக்கினால், அரசியல் யாப்பில் இருக்கின்ற 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை உச்சபட்சமாக பயன்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும். இதனை வலுப்படுத்தும் கோரிக்கைகளில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபடவேண்டும்.
ஏனெனில், இதனைவிட்டால் வேறு தெரிவுகள் தற்போதைக்கு சாதகமாக இல்லை.
புதிய அரசியல் யாப்பென்று கூறி விடயங்களை ஆரம்பிக்கலாம் ஆனால், அது சாத்தியமான ஒன்றல்ல. இதற்கு, ரணில் – மைத்திரி ஆட்சிக் காலம் நல்ல உதாரணம்.
கொழும்பின் ஆட்சியாளர்கள் வேண்டுமானால் அவ்வாறு கூறிக் காலத்தை விரயம் செய்ய முற்படலாம்.
ஆனால், அது தோல்வியடைந்தால் சிங்கள தரப்புக்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. நஷ்டம் அனைத்தும் தமிழர்களுக்கு மட்டும்தான்.
ஏனெனில், புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்கான தேவையை சிங்கள மக்கள் உணரவில்லை.
இதனைப் புரிந்து கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்துமே விழலுக்கு இறைத்த நீராகும்.
மக்களை வழிநடத்தும் தலைவர்கள் என்போர் மக்களுக்குப் போலியான நம்பிக்கைகளை கொடுக்கக்கூடாது.
மக்களின் இயல்பான உணர்வு நிலைக்கு பின்னால் செல்பவர்கள் தலைவர்கள் அல்லர்.
மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைத்து அவர்களை சரியான திசையில் வழிநடத்துபவர்களே தலைவர்களாவர்.
அரசியல் கட்சிகள் தவறிழைக்கும்போது அந்தத் தவறுகளை சுட்டிக்காட்ட ஊடகங்களும் புத்திஜீவிகளும் சிவில் சமூக தரப்புக்களும் முன்வர வேண்டும்.
ஆனால், விடயங்களை ஆழமாக நோக்கினால் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஏனைய தரப்புக்களுக்கு உண்மையிலேயே அரசியல் தீர்வு தொடர்பான கரிசனை இருக்கின்றதா என்னும் சந்தேகமே எழுகின்றது? இருந்திருந்தால் இவ்வாறு பொறுப்பற்று செயல்படுவார்களா?