அரசை விமர்சிக்கும் 200 பத்திரிகையாளர்களை கைது செய்யத் திட்டம் – பாராளுமன்றில் பாக்கீர் பகீர் தகவல்

0
224

அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் 200 பத்திரிகையாளர்களை கைது செய்யும் திட்டம் இலங்கைப் பொலிஸாரிடமுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அரசாங்கம் பத்திரிகையாளர்களை இலக்குவைக்கின்றது என தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் பட்டியலொன்றை பொலிஸாரிடம் வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களை கைதுசெய்வதற்கான உத்தரவினை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
200 ஊடகவியலாளர்களின் பெயர்களை பொலிஸாரிடம் நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் வழங்கியுள்ளது என்ற தகவல் தனக்குக் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இளம் தலைவராகயிருந்தவேளை மகிந்த ராஜபகஷ மனித உரிமைக்காகப் போராடி ஜெனிவா வரை சென்றவர் என்பதை இம்தியாஸ் பாகீர் மாக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக மனித உரிமைகளுக்காக குரல்கொடுத்த மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அதற்கு எதிரான வழியில் பயணிப்பது நல்லதல்ல. அவ்வாறான அரசாங்கமொன்றை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது கடந்த காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முழு உலகமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது,தொழில்சாலைகளும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


இவை மிகவும் நெருக்கடியான தருணங்கள்,அனைவரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் தமது பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உதவவேண்டும்,எனினும் வரவு -செலவு திட்டத்தில் இதனை காணமுடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.