கிளிநொச்சி – வன்னேரிக்குளம் விவசாயிகள், சிறுபோகத்தில் அறுவடை செய்யும் நெல்லை உலர வைப்பதற்கான போதிய நெல் உலரவிடும் தளங்கள் இன்றியும், அறுவடை செய்யும் நெல்லை சந்தைப்படுத்த முடியாமலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். வன்னேரிக்குளத்தின் கீழுள்ள விவசாயிகள் தற்போது சிறுபோக அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அறுவடைகள் இடம்பெற்று வரும் நிலையில், அறுவடைக்கு தேவையான எரிபொருள் இன்மை, அறுவடைசெய்யும் நெல்லைச் சந்தைப்படுத்த முடியாமை, நெல்லை உலர விடுவதற்கான தள வசதிகள் இன்மை என பல்வேறு இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். தற்போது மழையுடனான காலநிலை நிலவி வருவதனால் மேலும் பாதிப்புக்களை எதிர்கொள்வதுடன் நெல்லை அறுவடை செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருதாகவும் தெரிவித்துள்ளனர். பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறுபோகச் செய்கை மேற்கொண்ட போதிலும், அதனால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்காத நிலையே காணப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.