அலி சப்ரியின் கண்டுபிடிப்பு?

0
173

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
நாட்டின் அரசியலமைப்பை மீறுகின்ற காரணத்தினால், அதனை தாம் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சராக இருந்த ஜி.எல்.பீரிஸூக்கும் அலி சப்ரிக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான் உண்டு – அதாவது, சப்ரி ஒரு இஸ்லாமியர்.
இதுவரை சிங்கள வெளிநாட்டு அமைச்சர்கள் கூறியதைத்தான், இப்போது ஒரு இஸ்லாமிய வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார்.
காலம் சென்ற மங்கள சமரவீரவை தவிர, ஏனைய வெளிவிவகார அமைச்சர் எவருமே சொந்த ஆற்றலுள்ளவர்களாக செயற்பட்டதில்லை.
அதிலும் அலி சப்ரி வெளிவிவகாரங்கள் தொடர்பில் அனுபவமில்லாத ஒருவர்.
ஆனாலும் தன்னை நிமியத்த எஜமானர்களுக்காக விசுவாசத்துடன் செயற்பட வேண்டுமென்பதில் அக்கறையுடன் இருக்கின்றார்.
என்னதான் எஜமான் விசுவாசத்தை காண்பித்தாலும் ஒரு விடயத்தை வாதிடுகின்றபோது, தர்க்க ரீதியாக பேச வேண்டும்.
இத்தனைக்கும் அலி சப்ரி ஒரு சட்டத்தரணியும் கூட.
2012 இல், அமெரிக்க அணுசரனையுடன் முதலாவது பிரேரணை, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அன்றிலிருந்து இன்றுவரையில் சிறிலங்காவின் மீதான மனித உரிமைகள் சார்ந்த அழுத்தங்கள் தொடர்கின்றன? ஏன் தொடர் கின்றன? மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், அதன் பின்னர் கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கமும் மனித உரிமைகள் தொடர்பான பொறுப்புக்கூறலை தட்டிக் கழித்ததன் காரணமாகவே, அழுத்தங்கள் தொடர்கின்றன.
சிறிலங்காவின் மீதான அழுத்தங்கள் நாட்டுக்கு அபகீர்த்தியென்றால், பொறுப்புக் கூறலை தொடர்ந்தும் தட்டிக் கழித்துவருவது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவில்லையா? பிரேரணைகள் அரசியலமைப்புக்கு முரணானது என்னும் வாதமானது, இன்னொரு வேடிக்கையாகும்.
1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டமானது, இன்றுவரையில் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.
அதனை மேலும் பலவீனப்படுத்துவதிலேயே ராஜபக்ஷ அரசாங்கங்கள் செயற்பட்டன.
கடந்த 35 வருடங்களாக இலங்கைத் தீவை மாறி, மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் எவையுமே 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் கடமையை நிறைவேற்றவில்லை.
இது மிகவும் வேடிக்கையான விடயம். ஒரு நாட்டின் அரசியலமைப்பை அமுல்படுத்துவதற்கு பின் நிற்கும் ஒரேயொரு நாடு சிறிலங்கா மட்டும்தான்.
அரசியலமைப்பை அப்பட்டமாக மீறிவரும் ஒரு நாட்டில், அரசியலமைப்பு தொடர்பில் விவாதிப்பதற்கு என்ன இருக்கின்றது? எனவே பொறுப்புக் கூறல் தொடர்பான அழுத்தங்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது என்னும் வாதம் நகைச்சுவைக்குரிய ஒன்றாகும்.
பொறுப்புக் கூறல் தொடர்பான பிரேரணைகள் தொடர்பில் தமிழ் மக்கள் திருப்தியுறவில்லை. சிறிலங்காவின் போர் குற்றங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதே தமிழ்த் தரப்புக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
ஆனால் மறுபுறமோ, இதுவரை முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கூட, சிறிலங்கா அரசாங்கங்கள் நிறைவேற்றவில்லை.
தொடர்ந்தும் பொறுப்புக் கூறலை எவ்வாறு இழுத்தடிக்கலாம் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே, மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்கள் தொடர்கின்றன.