அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

0
76

அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைகளுக்கு நேரடியாக பங்களிக்க வேண்டிய அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் இணைப்பு மற்றும் வசதிகளை இது எளிதாக்கும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசேட செயற்பாட்டு அறையின் தொலைபேசி இலக்கங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை 06:00 மணி முதல் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்படும் விசேட பிரிவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விசேட செயற்பாட்டு அறை பொலிஸ் தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபரின் மேற்பார்வையின் கீழ் இயங்குவதுடன் அவசரகால நிலைகள் மற்றும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

இதன்படி, 011-24 21 820 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசேட செயற்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், 011- 243 92 12, 011- 201 30 36 அல்லது 011- 20 130 39 ஆகிய எண்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.