மெல்பர்னில் நடைபெற்று வரும் வருடத்தின் முதலாவது க்ராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை கின்வென் ஸெங், நடுநிலையாளர் அரினா சபலென்கா ஆகியோர் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
இந்த இருவருக்கும் இடையிலான இறுதிப் போட்டி ரொட் லேவர் அரினா அரங்கில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னோடியாக வியாழக்கிழமை நடைபெற்ற ஓர் அரை இறுதிப் போட்டியில் யூக்ரெய்ன் வீராங்கனை டயனா யஸ்ட்ரெம்ஸ்காவை 2 நேர் செட்களில் (6 – 4, 6 – 4) கின்வென் ஸெங் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றார்.
இரண்டு தடவைகள் க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றெடுத்த லி நா என்பவருக்கு அடுத்ததாக க்ராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டி வரலாற்றில் விளையாடும் இரண்டாவது சீனர ஸெங் ஆவார்.
லி நா 2011இல் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸிலும் 2014இல் விம்பிள்டனிலும் சம்பியனானார். சரியாக பத்து வருடங்களின் பின்னர் இப்போது மற்றொரு சீன வீராங்கனை க்ராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளார்
மிகவும் இறுக்கமாக நடைபெற்ற மற்றைய அரை இறுதிப் போட்டியில் 7 (7) – 6 (2), 6 – 4 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் ஐக்கிய அமெரிக்காவின் கோகோ கோஃபை வெற்றிகொண்ட அரினா சபலென்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
கோகோ கோஃப் கடந்த வருடம் சொந்த நாட்டில் ஐக்கிய அமெரிக்கா பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் சம்பியனாகியிருந்தார்.
சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் இன்னோரென்ன சர்வதேச விளையாட்டுத்துறை சம்மேளனங்களினால் ரஷ்யா, பெலாருசியா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் அவுஸ்திரேலியா பகிரங்க போட்டியில் நடுநிலையாளர்களாக பங்குபற்றுகின்றனர்.
அதற்கு அமைய பெலாருசியாவைச் சேர்ந்த அரினா சபலென்கா இந்தப் போட்டியில் நடுநிலையாளராக பங்குபற்றுகிறார்.