கைது செய்யப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டாக்களுமே இவ்வாறு மீட்கப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சட்டத்துக்கு முரணாக கருத்துக்களை முன்வைத்த குற்றச்சாட்டில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய அவர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அஜித் ரோஹண குறிப்பிட்டார்.