முன்னைநாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இவ்வாறு கூறியிருக்கின்றார். அதாவது, தமிழ் மக்களுக்கு இராணு வத்தின்மீது கோபமில்லை. அவர்களுக்கு கோபம் இருந்திருந் தால் – அவர்கள் எனக்கு வாக்களித்திருக்கமாட்டார்கள். 2010 ஜனாதிபதித் தேர்தலின்போது சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரங்களை முன்னெடுத்திருந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சி, ரெலோ, ஈ. பி. ஆர். எல். எவ் ஆகிய கட்சிகள் அனைத்தும் பொன் சேகா ஆதரவு பிரசாரங்களை முன்னெடுத்திருந்தன. ஆனால், அதே கட்சிகள் அந்த ஆண்டு நடைபெற்ற பாராளு மன்றத் தேர்தலில் வடக்கு – கிழக்கிலிருந்து இராணுவம் வெளி யேற வேண்டும் – இராணுவத்தின் பிரசன்னத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்று பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன. எதற்காக பொன்சேகாவை ஆதரித்தார்கள் – கேட்டால் மகிந்த எதிர்ப்பு என்று பதில் வரும் அல்லது தமிழ் மக்கள் அப்படித்தான் சிந்தித்தார்கள் என்றும் பதில் சொல்லக்கூடும். ஆனால், ஓர் அரசியல் தலை மைக்கு தான் என்ன செய்கிறேன் – ஏன் செய்கிறேன் என்னும் புரிதல் இருக்கவேண்டும்.
அவ்வாறில்லாது விட்டால் அவர்களால் ஒரு தலைமையாக தங்களை முன்னிறுத்த முடியாது. 2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டுமென்னும் உரையாடல்கள் நடைபெற்று வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதில் உறுதியான நிலைப் பாட்டை இதவரையில் தமிழ் கட்சிகள் காண்பிக்கவில்லை. தொடர்ந்தும் தளம்பலான அணுகுமுறையையே முன்னெடுத்து வருகின்றனர். சில கட்சிகள் கொள்கை அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகக் கூறினாலும்கூட, அதற்கான முயற்சிகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை.
ஒருபுறம், தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் முயற்சியை ஆத ரிப்பதாகக் கூறிக்கொண்டு மறுபுறம் தென்னிலங்கை வேட்பா ளர்களுடன் உறவாடுவதிலும் தீவிரம் காண்பித்து வருகின்றனர். இது அவர்களின் தளம்பல் நிலைமையை எடுத்துக் காட்டுகின் றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் சரத் பொன்சேகாவின் இவ்வாறானதொரு கருத்து கவனத்தைப் பெறுகின்றது. 2010இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூரநோக்குடன் விடயத்தை கையாண்டதா என்னும் கேள்விக்கு பொறுப்புக்கூறும் நிலையில் அன்று முடிவெடுத்தவர்கள் இருக்கின்றனரா?
மக்களுக்கு பொறுப்புக்கூறும் அடிப்படையில் தமிழ்த் தேசிய கட்சிகள் என்போர் செயல்படுவதில்லை. இன்றுவரையில் இதுதான் தொடர் கதை. போருக்கு பின்னரான மூன்று தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை நோக்கி விரல் நீட்டிவிட்டு, அடுத்த பாராளுமன்றத் தேர்தல்களில் அவர்களை விமர்சித்து – எதிர்த்து பிரசாரங்களை செய்யும் சித்துவிளையாட்டு அரசியலையே தமிழ்த் தேசிய கட்சிகள் இதுவரையில் முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.
இதனால் தமிழ் மக்கள் நன்மையை பெற்றிருந்தால் அது வேறு விடயம். ஒன்று நன்மையை தரவில்லை, அதேவேளை, தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது என்றால் அவ்வாறான செயல்பாடுகளை மீண்டும் செய்யுமாறு எந்த அடிப்படையில் கோர முடியும்? அதற்கான தார்மீக தகுதி தமிழ்த் தேசிய கட்சிகள் என் போருக்கு இருக்கின்றதா?