இது காவிகளின் தேசமா?

0
156

சிங்கள தேசிய வாதமும் பௌத்த மதவாதமும் பின்னிப் பிணைந்திருப்பவை.
நாட்டின் அரசியல் சாசனத்துக்கும் அப்பால்பட்டவர்களான ஒரு தோற்றம் பௌத்த மதபீடங்களுக்கு உண்டு.
இஸ்லாமிய மதவாதத்தின் பிடிக்குள் சிக்கியிருக்கின்ற பாகிஸ்தானில் கூட மதத் தலைவர்கள் நாட்டின் அரசியல் சாசனத்தில் தலையீடு செய்வதில்லை.
ஈரானிய ஆன்மிக தலைவருக்கு அவ்வாறானதோர் அளவுகடந்த செல்வாக்கு உண்டு.
இலங்கை ஒரு ஜனநாயக மரபுகளை பேணிக்கொள்ளும் நாடாக வெளியில் காண்பித்துக் கொண்டாலும்கூட மறைமுகமாக அனைத்து அரசியல் தீர்மானங்களிலும் பௌத்த பீடங்கள் ஏதோவொரு வகையில் மூக்கை
நுழைக்கின்றன.
இறுதியில் அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசியல்வாதிகளுக்கு ஏற்படுகின்றது.
நல்லாட்சி காலத்தில் பௌத்த மதபீடங்களிடம் புதிய அரசியல் யாப்புக்கான நகலை சமர்ப்பித்து ஆலோசனை கேட்ட கதை பலரும் அறிந்ததே.
அரசியல் யாப்புக்கு மதபீடங்களிடம் ஆலோசனை கேட்கும் ஒரேயொரு நாடு இலங்கைத் தீவு மட்டும்தான்.
மகிந்த ராஜபக்ஷ பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்திலிருந்தபோது காவிகளின் எல்லையற்ற அரசியல் தலையீடுகளுக்கான கதவுகளைத் திறந்திருந்தனர்.
ஞானசார தேரரின் தலைமையில் பொதுபல சேனா என்னும் அமைப்பு தலைவிரித்தாடுவதற்கு அனுமதியளித்திருந்தனர்.
கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிர சாரத்தில் முன்னணி பௌத்த பிக்குகள் பலர் நேரடியாக ஈடுபட்டனர்.
13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமலாக்கி பௌத்த அரசியல் சாசனமொன்றை கொண்டுவருவதற்காகவே கோட்டாபயவின் வெற்றியை அவர்கள் விரும்பினர்.
கோட்டாபயவும் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே செயல்பட்டிருந்தார்.
தன்னைனொரு பௌத்த – சிங்கள தலைவரென்று பிரகடனம் செய்திருந்தார்.
பௌத்த பிக்குகளை முதன்முதலாக அரசியலுக்குள் கொண்டுவந்தவர்கள் ஜாதிக ஹெல உறுமயவினர்.
அதன் பின்னர் பிக்குகளை தங்களின் குடும்ப அதிகாரத்துக்காக பயன்படுத்தியவர்கள் ராஜபக்ஷக்கள்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முயற்சிகள் அனைத்தையும் தடுப்பவர்களாகவே பௌத்த பிக்குகள் இருக்கின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து 13ஆவது திருத்தச்சட்டத்தின் நகலை எரித்து – எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
13ஆவது திருத்தச் சட்டம் நாட்டின் அரசியலமைப்பு.
நாட்டின் அரசியலமைப்பை அமுல்படுத்துவதைத் தடுக்க முற்படுவர்கள் சட்டத்தின் முன்னால் கடுமையான குற்றவாளிகள்.
அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய வல்லமையுடன் ஆட்சியாளர்கள் இருக்கின்றனரா? வடக்கு – கிழக்கில் பேரணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்படுகின்றது.
நாட்டின் அரசியலமைப்புக்கு எதிராக வீதிகளில் இறங்கி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எல்லே குணவங்ச தேரருக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்படுமா? தேரர்களோடு இணைந்து தமிழ் மக்களின் நலன்களை பேணிக்
கொள்ள முடியுமென்று கூறி வடக்கு – கிழக்கில் இந்து குழுவொன்று செயல்பட்டது.
பொதுபல சேனாவுடன் தொடர்புகளை பேணினர்.
அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?