இந்தியாவின் தலையீடு?

0
324

சோவியத் யூனியனின் உடைவை தொடர்ந்து உலக வரலாறு முடிந்துவிட்ட தாக, அமெரிக்க அரசியல் விஞ்ஞானியான, பிரான்சிஸ் புக்குமாயா பிரகடனம் செய்தார்.
‘உலக வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்’ என்னும், அவரின் நூல், 1992இல் வெளியானது. இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து, உலக அரசியல் இரண்டு நாடுகளுக்கிடையிலான முரண்பாட்டால் புரிந்துகொள்ளப்பட்டது.
அரசியலில் இதனையே, இரு துருவ ஒழுங்கு என்பர்.
ஒருபுறம் சோவியத் யூனியனும் மறுபுறம் ஐக்கிய அமெரிக்காவும் உலகத்தை கட்டுப்படுத்தும் போட்டியில் மோதிக் கொண்டன.
இந்த நிலையில்தான், 1991 (1990-1991) களின் இறுதியில், சோவியத் யூனியன் பல துண்டுகளாக உடைவுற்றது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க – சோவியத் பனிப்போர் முடிவுற்றது.
அதாவது, பனிப்போரில் அமெரிக்கா வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, முழு உலகும் அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் வந்தது.
90களுக்கு பின்னரான உலக ஒழுங்கு என்பதே – அமெரிக்காவால் தீர்மானிக்கப்படும் உலக ஒழுங்காகவே இருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டுதான், புக்குயாமாவும் தனது வாதத்தை முன்வைத்திருந்தார்.
அதாவது, இனி உலகத்தை தாராளவாத அரசியலே ஆளும் என்பதே அவரின் வாதமாகும்.
உண்மையிலேயே வரலாறு முடிந்துதான் விட்டதா? கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் அரசியல் விவாதங்கள் மீளவும் வரலாற்றின் புதிய ஆரம்பம் தொடர்பானதாக இருக்கின்றது.
முன்னர் சோவியத் யூனியன் இருந்த இடத்தில், இப்போது சீனா இருக்கின்றது.
2049இல், சீனா, உலக ஒழுங்கைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக எழுச்சியடைந்துவிடும் என்றவாறான விவாதங்கள் மேற்குலகை ஆக்கிரமித்திருக்கின்றன.
மனித குலம் இருக்கும் வரையில், அதிகார மோதல்களும் இருக்கும், அதிகார மோதல்கள் இருக்கும் வரையில் வரலாறு ஒருபோதுமே முடிந்துவிடப் போவதில்லை.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்னும் அடிப்படையில்தான், இந்தியாவின் அன்றைய தலையீடு நிகழ்ந்தது.
ஒரு பிராந்திய சக்தி என்னும் நிலையில் இந்தியாவின் – தலையிடும் வரலாறும் முடிந்துவிடப் போவதில்லை – என்பதையே அண்மைக்கால விடயங்கள் தெளிவுபடுத்துகின்றன.
அன்றைய இந்தியாவிடம், அமெரிக்காவின் விரிவாக்கம் தொடர்பான அச்சங்கள் மேலோங்கியிருந்தன. இன்றைய இந்தியாவிடம், சீனாவின் எழுச்சி தொடர்பான அச்சங்கள் மேலோங்கியிருக்கின்றன. இதிலிருந்து இந்தியாவால் ஒருபோதும் விலகியிருக்க முடியாது.
இந்தியா விலகினால், அதன் பின்னர், இந்தப் பிராந்தியத்தில், இந்தியா ஒரு சக்தியாக இருக்கவே முடியாது. ஒரு பிரதான சக்தியாக இருக்க வேண்டுமென்றால், இந்தியா தலையிட்டுத்தான் ஆக வேண்டும்.
வேறு எந்தவொரு தெரிவும் இந்தியாவிடம் இல்லை.
சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் விவகாரத்தில், இலங்கையின் இறைமை மதிக்கப்பட வேண்டுமென்று சீனா தெரிவித்திருக்கின்றது.
ஓர் இறைமையுள்ள நாட்டின் விடயங்களில் இந்தியா தலையீடு செய்யக்கூடாதென்பதே சீனாவின் வாதமாக இருக்கின்றது.
ஆனால், பலம்பொருந்திய நாடுகளின் தலையீடுகளுக்கு இறைமை எப்போதுமே ஒரு தடையாக இருப்பதில்லை.
ஏனெனில், ஒரு பெரிய நாட்டுக்கு அருகிலிருக்கும் சிறிய நாடு, அதன் விருப்பப்படி நடக்க முடியாது. அவ்வாறு நடந்தால், குறித்த பெரிய நாட்டின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
1984இல், அப்போதைய இந்திராகாந்தி தலைமையிலான இந்தியா, தேசிய பாதுகாப்பு என்னும் அடிப்படையில்தான், இலங்கையின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையீடு செய்தது.
பாரிய நெருக்கடி ஏற்பட்டால், அவ்வாறானதொரு தலையீடு மீண்டும் நிகழாது என்றில்லை.
ஏனெனில், ஒரு பலம்பொருந்திய நாட்டின் பொறுமைக்கு எல்லையுண்டு.
அந்த எல்லைக் கோட்டை தாண்டினால், அதன் பின்னர் நாடுகளின் இறைமை என்பது ஒரு பொருட்டல்ல.
தற்போது இடம்பெற்றுவரும், ரஷ்ய- உக்ரைன் யுத்தம் இந்த அடிப்படையில்தான் நிகழ்கின்றது.
உக்ரைன் ஓர் இறைமையுள்ள நாடு ஆனாலும் அதன் சொந்த முடிவுகள் ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்குவதாக ரஷ்யா கருதுகின்றது.
இதன் காரணமாகவே, ரஷ்யா யுத்தத்தைத் தெரிவு செய்தது.
எனவே, இலங்கை விடயத்தில் இந்தியாவின் தலையீடுகள் எக்காலத்திலும் தவிர்க்கவே முடியாதது. இதனைத் தவிர்க்க முடியுமென்று எண்ணுகின்ற போதெல்லாம், இலங்கைத் தீவு பாரதூரமான நெருக்கடிக்குள் வீழ்வதும் தவிர்க்கவே முடியாதது.
தமிழ் மக்களின் பிரச்னைக்கான தீர்வு விடயத்திலும் இதுதான் யதார்த்தம்.
இது எவருடைய விருப்பமும் அல்ல மாறாக, பிராந்திய நிர்ப்பந்தம்.