இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், 80 இலட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்றுக் குறைந்துள்ள போதும் கட்டுக்குள் வரவில்லை. தற்போது தினசரி சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிய நோய்த்தொற்றுக்களைவிட குணமடையும் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86 இலட்சத்து 36 ஆயிரத்து 12 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 512 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 571ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 13 ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 50 ஆயிரத்து 326 பேர் குணமடைந்தனர்.
நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4 இலட்சத்து 94 ஆயிரத்து 657 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.48 சதவீதமாக நீடிக்கிறது. குணமடையும் விகிதம் 92.79 சதவீதமாக உயர்ந்துள்ளது.