இந்தியாவும் சமஷ்டி தீர்வும்

0
157

இந்தியாவிடம் கோரிக்கை முன்வைத்த, ஆறு கட்சிகள் முதலாவது மக்கள் சந்திப்பொன்றை நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தன. ஆறு கட்சிகள் ஏன் இவ்வாறானதொரு நகர்வை மேற்கொண்டன – இன்றைய சூழலில், இந்தியாவை நோக்கி செல்லவேண்டியதன் முக்கியத்துவம் என்ன – போன்ற விடயங்கள் அங்கு விவாதிக்கப்பட்டன. இந்தியாவிடம் எவ்வாறான கோரிக்கையை முன்வைக்க வேண்டுமென்பதில் ஓர் அபிப்பிராயம் சொல்லப்படுகின்றது. அதாவது, சமஷ்டி அடிப்படையிலான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். உச்சபட்சமான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். இது சரியான கூற்றுத்தானா?

இந்தியாவிடம் எவ்வாறான கோரிக்கையுடன் செல்வது சரியானது? சுமஷ்டி கோரிக்கையை வைக்கலாம் – அதற்கு மேலும் கேட்கலாம். கேட்பதற்கு எந்த எல்லையும் கிடையாதுதான் ஆனால், இந்தியாவின் தலையீட்டுக்கு எல்லைகள் உண்டு. அந்த எல்லைக் கோடு எது?

இந்தியாவில் மாநில ஆட்சி சிறப்பான நிலையிலிருந்தாலும்கூட, அது ஒரு முழுமையான சமஷ்டி கட்டமைப்பல்ல. அரை சமஷ்டி முறைமைதான் இந்தியாவில் உண்டு. இந்த நிலையில் தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் சமஷ்டி அடிப்படையிலான கோரிக்கையொன்றை முன்வைக்க முடியுமா? அவ்வாறு முன்வைத்தால் இந்தியா அதற்கு பதிலளிக்குமா?

எனவே, ஒரு நாட்டை அணுகும் போது, அந்த நாட்டுக்கு ஏற்புடைய ஒரு விடயத்துடன்தான் செல்ல வேண்டும். இந்திய – இலங்கை ஒப்பந்தம்தான் அந்த விடயம். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் என்னும் கோரிக்கையுடன் செல்லும்போதுதான், அதற்கு இந்தியா செவிசாய்க்கும் ஏனெனில், தமிழ் மக்கள் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கான ஓர் அரசியல் ஏற்பாடாகத்தான் 13ஆவது திருத்தச் சட்டத்தை இந்தியா கொண்டுவந்தது.

ஆனால், அது இன்றுவரையில் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. மேலும் பலவீனப்படுத்தப்பட்டிருக்கின்றது. இன்னும் பலவீனப்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களின் பெயரால் கொண்டுவரப்பட்ட, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டுமென்னும் கோரிக்கையுடன் இந்தியாவிடம் செல்லும்போது, அதனை இந்தியா சாதாரணமாகக் கிடப்பில் போடமுடியாது. அப்படி  போட்டால், இந்தியா அதன் திட்டத்தையே கிடப்பில் போடுவதாக அமையும். இந்த விடயங்களை துல்லியமாகக் கணித்தால், சமஷ்டி தீர்வை வலியுறுத்துவதிலுள்ள சிக்கல்களை துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும். 13ஈவது திருத்தத்தை கையிலெடுப்பதிலுள்ள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

விடயங்களை மேலோட்டமாக பார்க்கக்கூடாது. ஒன்றை ஆதரிப்பதற்கு அல்லது எதிர்ப்பதற்கு முன்னர் விடயங்களை ஆழமாக அலசி ஆராய வேண்டும். தமிழ்த் தேசிய பரப்பில் அதிகமான விடயங்கள் உணர்ச்சிகரமாகவே பார்க்கப்படுகின்றன. அறிவுபூர்வமாக நோக்கப்படுவதில்லை. ’13’ விடயத்திலும் இதுதான் நடக்கிகின்றது. இந்தியாவின் ஆதரவை வெற்றிகொள்ள வேண்டுமென்றால், இந்தியாவுக்கு வாய்ப்பான, இந்தியாவுக்கு ஈடுபாடுள்ள, இந்தியாவும் வலியுறுத்துகின்ற ஒரு விடயத்துடன்தான் செல்ல வேண்டும்.