இந்த சிக்கல் தேவையானதா?

0
144

வவுனியாவில் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் சீனித் தொழிற்சாலையானது தற்போது ஒரு விவாதப் பொருளாக மாறியிருகின்றது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சிகளில் ஒன்றான ரெலோவே இந்தத் திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றது.
ஆனால், அந்த கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகள் இதனை ஆதரிக்கவில்லை.
இந்த நிலையில், பொதுவெளிகளில் ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
முதலில், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக போராளிகள் கட்சி இந்தத் திட்டத்துக்கு பின்னால் சீனா இருப்பதான சந்தேகத்தை வெளிப்படுத்தித்தங்களின் எதிர்ப்பை வெளியிட்டது.
தற்போது, பிறிதொரு பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் முன்னைநாள் விவசாய அமைச்சருமான சிவநேசன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வன்னி பாலைவனம் ஆகுமென்று தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை, வடக்கு மாகாண சபையின் முன்னைநாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டிருக்கின்றார்.
தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இருக்கின்றபோது இவ்வாறானதொரு சர்ச்சை தேவையானதா? தமிழர் பகுதிகளை நோக்கி முதலீடுகளை கொண்டுவர வேண்டும் – அதில் முரண்பட ஒன்றுமில்லை.
ஆனால், தமிழர் பகுதிகளில் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கின்றபோது, அதில் தமிழ் கட்சிகளால் எந்தளவு தலையீடு செய்ய முடியும் என்னும் தூரநோக்கும் அவசியம்.
மத்திய அரசின் பரிந்துரையின் மூலம் மட்டும் முன்னெடுக்கப்படும் திட்டங்களால் தமிழ் மக்கள் பெரியளவில் நன்மையடைய முடியாது.
வேண்டுமானால் சில நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.
குறிப்பாக, ரெலோ இவ்வாறானதொரு திட்டத்துக்கு ஆதரவு வழங்கும் போது கூட்டுப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது கட்டாயமானது – ஏனெனில், ரெலோ – ஒரு தனியான கட்சியாக இருக்கின்ற போதும் ஐந்து கட்சிகளை உள்ளடக்கியிருக்கும் கூட்டணி ஒன்றின் அங்கத்துவ கட்சியாகவும் இருக்கின்றது.
எனவே, இவ்வாறான மிகப்பெரிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குகின்ற போது, கூட்டமைப்புக்குள் வெளிப்படையான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறானதொரு திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆராய்ந்து, அதனை முன்னெடுப்பதா – அல்லது இல்லையா – என்னும் அடிப்படையில் கூட்டுத் தீர்மானத்தை மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஏனெனில், இவ்வாறான திட்டங்களை வெறுமனே முதலீடு என்னும் அடிப்படையில் மட்டும் நோக்க முடியாது.
தமிழர்களிடம் காணியை தீர்மானிக்கும் அதிகாரங்கள் இல்லாத நிலையில் – மாகாண சபை நிர்வாகமும் இல்லாத நிலையில், தமிழ் கட்சி ஒன்றின் ஆதரவின் பெயரில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான திட்டங்கள் குடியேற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படமாட்டாது – என்பதற்கு உத்தரவாதங்கள் இல்லை.
எனவே, இந்த நிலையில், எதிர்காலத்தில் சிக்கலான நிலைமைகள் ஏற்படுமாக இருந்தால் அதற்கான கூட்டுப் பொறுப்பை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுமே பொறுப்பேற்க நேரிடும்.
இதனை கருத்தில் கொண்டே ரெலோ விடயங்களை தீர்மானித்திருக்க வேண்டும்.
முடிவை எடுத்த பின்னர், அதற்காக விளக்கமளிப்பதிலும் – அதனை நியாயப்படுத்துவதிலும் பயனில்லை.
முன்னர் சம்பந்தன் தன்னிச்சையாக செயல்படுகின்றார் – என்னும் குற்றச்சாட்டையே ஏனைய கட்சிகள் முன்வைத்தன.
முன்கூட்டியே கலந்துரையாடி, கூட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாறான விடயங்களை முன்னெடுத்திருந்தால் இவ்வாறு ஒவ்வொரு கட்சியும் மாறுபாடான அறிக்கைகளை வெளியிடுவதாகவும் – பின்னர் அதற்கு ரெலோ மறுப்பும் தெரிவிப்பதாகவும் – இந்த நிலைமை நீண்டு செல்ல வேண்டியேற்பட்டிருக்காது.
இப்போது, தேவையற்ற சர்ச்சைக்குள் ஜனநாய தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிக்குண்டிருக்கின்றது.
இது அதன் தேர்தல் எதிர்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.