தாக்குதல் தொடர்ந்தால் இன்னும் பேரழிவு தரும் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதாக கூறி, அந்த நாடு மீது கடந்த 13ஆம் திகதி முதல் இஸ்ரேல் தாக்கி வருகிறது.
ஈரானின் அணு ஆயுதத் தளங்கள் அணு விஞ்ஞானிகள் என அணுசக்தி துறையை குறி வைத்து தாக்கியது. அத்துடன் ஈரான் நாட்டின் இராணுவ நிலைகள், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் என பிற பகுதிகளையும் இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகிறது.
இதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது அலை அலையாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது. இதில் இஸ்ரேலும் பலத்த சேதங்களை சந்தித்து வருகிறது. மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இந்த இராணுவ மோதல் 2ஆவது வாரத்தை எட்டியிருக்கிறது.
நேற்றும் இரு நாடுகளும் தங்கள் மோதலை எந்தவித குறையும் இன்றி தொடர்ந்தன. இந்த நிலையில், தாக்குதல் தொடர்ந்தால் ‘இன்னும் பேரழிவு தரும்’ பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷ்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் கூறுகையில், ‘எங்கள் அமைதியான அணுசக்தித் திட்டம் குறித்து நம்பிக்கையை வளர்க்க மற்றவர்களுடன் பேசவும் பணியாற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்கள் அணுசக்தி நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம்.
இஸ்ரேல் எங்களைத் தொடர்ந்து தாக்கினால், எங்கள் பதில் இன்னும் அழிவுகரமானதாக இருக்கும்’என்று அவர் கூறினார்.