இன நல்லுறவு பாலமாக மலேசியா – சிங்கப்பூரில் தை பூசம்!

0
487

-அலசுவது இராஜதந்திரி-

இலங்கையில் வரலாற்று முக்கியத்துவமிக்க வழிபாட்டுத்தலங்கள் பேரினவாதிகளின் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவது அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ள நிலையில், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல்லின, பலமதங்களைக்கொண்ட நாடுகள் இன, மத ஐக்கியத்துக்கு முன்னுதாரணமாக இருப்பதை நேற்றைய தினம் இவ்விரு நாடுகளிலும் கொண்டாடப்பட்ட தைப்பூச விழா எடுத்துக்காட்டியிருந்தது.

வவுனியாவில் வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிசிவன் ஆலயம், மற்றும் முல்லைத்தீவு பகுதியிலுள்ள குருந்தூர் மலையிலிருக்கும் சிவன் வழிபாட்டுத்தலம், திருகோணமலையிலுள்ள கன்னியா வெந்நீர் ஊற்று என்பவை கடந்த சில மாதங்களாக மதவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றன.

இந்த அச்சுறுத்தல்கள், அகழ்வாராய்ச்சி என்ற வகையில் அரசாங்கத்தின் அனுசரணையோடு மேற்கொள்ளப்பட்டு வருவதே கவலைக்குரியதாக இருக்கின்றது. நில அபகரிப்பு, அத்துமீறிய குடியேற்றங்கள் போன்றவை வடக்கு-கிழக்கில் இனப்பூசல்களுக்கான முக்கிய காரணங்களாக விளங்கி வந்தன.

இனப் பூசல்களுக்கான காரணிகள்

ஆனால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, எக்காரணங்கள் இனப்பூசல்களுக்கு மூலகாரணங்களாக இருந்தனவோ அக்காரணங்கள் மீளவும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன.

இருதினங்களுக்கு முன்னர் குருந்தூர் ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் தமது எதிர்ப்பை அகழ்வாராய்ச்சியாளருக்கு வெளியிட்டதால் கைதாகி விடுதலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு-கிழக்கு பிரதேசங்கள் அபரிமிதமான வளங்களை சகல துறைகளிலும் கொண்டுள்ளன. இவ்வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குப்பதிலாக, அகழ்வாராய்ச்சி என்ற ரீதியில் அரசியல் நோக்கங்களுக்காக தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்கள் அத்துமீறப்பட்டு வருகின்றன.

மக்களின் எதிர்பார்ப்பு

யுத்தம் முடிவுற்றதுமே அபிவிருத்தி குறித்த எதிர்பார்ப்பே வடக்கு-கிழக்கு மக்களிடம் காணப்பட்டிருந்தது. எனவே, அபிவிருத்தி நடவடிக்கைகளை உரிய வகையில் வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளாது, இனவாத நோக்கத்தோடு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகிறது.

இத்தகைய சூழலிலேயே பல்லினத்தன்மைகொண்ட சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சகல இனமக்களதும் தனித்துவங்கள் நல்ல முறையில் மதிக்கப்பட்டும் , பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.

மலேசியா, சிங்கப்பூர்போன்ற நாடுகளின் இன்றைய உயர்வான நிலைக்கு, ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இலங்கைத் தமிழர்கள் வழங்கிய பங்களிப்பும் முக்கிய காரணமாகும். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட அந்நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், வெளிநாட்டமைச்சருமான இராஜரத்தினம் பெரும்பங்காற்றியிருந்தார்.

சிங்கப்பூர் இராஜரத்தினம்

சிங்கப்பூரின் ஸ்தாபக பிரதமரான லீ குவான் யூவிற்கு பக்கபலமாக நின்று சிங்கப்பூரை இராஜரத்தினம் கட்டியெழுப்பியிருந்தார்.

இதுதவிர, இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட மற்றொருவரான தற்போதைய உதவிப் பிரதமர் தர்மரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக பதவியேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் தீபாவளி, தைப்பொங்கல், நவராத்திரி போன்ற இந்து மத பண்டிகைகள் மேற்குலகில் கிறிஸ்மஸ், ஈஸ்டர் போன்ற பண்டிகைகளுக்கு நிகரான முறையில் கொண்டாடப்படுகின்றன.

இந்துப்பண்டிகைகளில் ஜனவரி மாதம் தோன்றுகின்ற முதலாவது பௌர்ணமி நிலவோடு கூடிவருகின்ற தைப்பூசம் முதன்மையானதாக மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. மலேசியா, சிங்கப்பூரில் தைப்பூசத்தின் சிறப்பு என்னவெனில், தமிழர்கள் மாத்திரமல்ல. இவ்விரு நாடுகளிலும் பெரும்பான்மையாக வாழ்கின்ற சீனர்கள் மற்றும் மலாய்  இனத்தவர்களும் பெருவிருப்போடு தைப்பூச வழிபாட்டு நிகழ்வுகளில் குதூகலமாக பங்கேற்கின்றனர்.

பத்து மலைக்குகை முருகன்

மலேசியாவின் சிரங்கூன் பத்து மலைக் குகைகளில் இருக்கின்ற ( ஞயவர உயஎநள) முருகன் ஆலயம்/ தைப்பூச விழாவுக்கு உலகப் பிரசித்தி பெற்றதாகும். பக்திபூர்வமான தைப்பூச விழாவை இன, மத நல்லுறவை பேணவும், மலேசியாவின் உல்லாச பயணத்துறையை மேம்படுத்தவும் மலேசிய அரசாங்கம் மிக சிறப்பான முறையில் கையாளுகின்றது.

பத்து குகை முருகன் ஆலயம் அழகான முறையில் நிலத்திலிருந்து 300 அடி உயரத்தில், சுண்ணாம்புக் கற்கள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது.  ஏறத்தாள 400 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த புவியியல் அமைப்பைக் கொண்டதாகவும் இக் குகை இருக்கின்றது.

இங்குள்ள முருகன் ஆலயம் 100 வருடங்களுக்குமேல் பழமை வாய்ந்ததாகும். இங்கு செல்வதற்கு 272 படிக்கட்டுகள் இருக்கின்றன. அத்துடன், இப்படிக்கட்டுகளின் ஆரம்பத்தில் மிக உயரமான முருகன் சிலையும் காணப்படுகிறது. இதன் உயரம் 141 அடிகளாகும் . இத்தடவை இம்மலைக் குகையின் படிக்கட்டுகள் வானவில் நிறங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு நிறமூட்டப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் மலாய் நாட்டவர்கள், சீனர்கள் மற்றும் அங்குள்ள பெருந்தொகையான இந்தியாவையும், இலங்கையையும் பூர்வீகமாகக்கொண்ட மக்கள், ஆயிரக்கணக்கில் பல்வேறு அலங்காரங்களுடைன் பல ரகத்திலுமான காவடிகளை எடுத்துவந்து முருக வழிபாட்டில் தைப்பூச தினத்தன்று கலந்துகொள்கின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இஸ்லாமியர்களையும் சீனர்களையும் பெரும்பான்மையாக கொண்டுள்ளபோதிலும் இன, மத ஐக்கியத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தையே ஆண்டுதோறும் இந் நாடுகளில் இடம்பெறுகின்ற தைப் பூசத் திருவிழா மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.