பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது.
அந்தக் கொடிய சட்டம் நீக்கப்பட்டே ஆகவேண்டும்.
அதனால்தான் பல சர்வதேச தன்னார்வ அமைப்புக்களும் அதனை வலியுறுத்தி வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்திருக்கின்றது.
அந்தச் சட்டத்தின் கொடுமையை அதிகம் சந்தித்தவர்கள் தமிழ் மக்களே.
பல தசாப்தங்களாக தமிழர்களை வாட்டிவதைத்த இந்த சட்டத்தின்கீழ் இன்றும் பலர் பல வருடங்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அதிகம் ஏன், கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரனை படுகொலை செய்ய திட்டமிட்டதாக கூறிக் கைதுசெய்யப்பட்டு இன்றும் பல மாதங்களாக சிலர் சிறையில் இருக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சகோதரர்களும் அந்தச் சட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. அவர்களும் தமிழர்களைப் போலவே தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே, அந்தச் சட்டத்தை திருத்தம்செய்வதற்கு சில திருத்தங்களை கோட்டாபய அரசாங்கம் பாராளுமன்றத்திலும் சமர்ப்பித்திருந்தது. அந்த திருத்தம் முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றும் சொல்லப்பட்டது.
இப்படியொரு திருத்தம் கொண்டுவருவதற்காக அரசாங்கம் ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தபோதுதான், நமது கூட்டமைப்பின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரும் மகஜரில் கையெழுத்துப்பெறும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.
நீர்கொழும்பில் அவ்வாறு கையெழுத்துப் பெறுகின்றபோது பலரும் முண்டியடித்து கையெழுத்துப் போடுகின்ற புகைப்படங்களை அந்த எம்.பி.க்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்ததையும் காணமுடிந்தது.
கடைசியாக மாத்தறையில் அப்படி கையெழுத்துப் பெற்றதாக ஞாபகம்.
அந்தக் கையெழுத்தைப் பெறும் நடவடிக்கை நடைபெற்றபோது அந்தச் சட்டம் நீக்கப்படும்வரை தமது போராட்டம் ஓயாது என்று அவர்கள் வீர சபதமும் எடுத்துக்கொண்டனர்.
ஆனால் அது நீக்கப்படாமலே, அவர்களின் அந்தப் போராட்டமும் காணாமல் போனது.
கையெழுத்துப் பெறப்பட்ட அந்த கையெழுத்துக்களுடன் கூடிய மகஜர் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதோ அல்லது அதற்கு என்ன நடந்தது என்பதோ இன்றுவரை பொதுவெளியில் தெரிவிக்கப்படவில்லை.
இப்போது, அந்தச் சட்டம் சிங்கள இனத்தவர்கள் மீது பாயத் தொடங்கியிருக்கின்றது.
அரகலய என்ற பெயரில் போராட்டம் நடந்தபோது, அத்துமீறி நடந்துகொண்டார்கள் என்று காரணம் கூறப்பட்டு பலரும் இப்போது கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
அவர்களில் சிலர் மீதும் பயங்கரவாத தடைச்சட்டமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
அதாவது இன்று அது சிங்கள மக்கள் மீதும் பாயத் தொடங்கியிருக்கின்றது.
அந்த வேளையில் திடீரென்று, நமது தமிழரசுக்கட்சி அதற்கு எதிராக மீண்டும் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை ஆரம்பித் திருக்கின்றது.
அதுகும் காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டைவரை அந்த போராட்டம் நடக்கவிருக்கின்றது.
சிங்கள மக்கள் இன்று அந்த சட்டத்தால் பாதிக்கப்படத் தொடங்கியிருக்கின்றபோது, இப்படியொரு போராட்டத்தை அம்பாந்தோட்டை வரை நடத்தினால் மிகப்பெரிய கூட்டத்துடன் போராட்டத்தை நடத்தி முடிக்கலாம் என்பது தெரிந்த சங்கதிதான்.
அப்படியொரு மாபெரும் போராட்டத்தை நடத்தி தமிழரசுக் கட்சி நாடளாவிய ரீதியில் தனது நடவடிக்கையை விஸ்தரிப்பது நல்லதுதான்.
இலங்கை தமிழரசுக்கட்சி என்ற தனது பெயருக்கு இப்போதாவது பொருள் கொடுக்க முற்பட்டிருக்கின்றது.
இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்ட அன்றுதான் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய காணி அபகரிப்பு தொடர்பான செய்தியும், பளையில் இராணுவத்தினருக்கு ஆயிரத்து எண்ணூறு ஏக்கர் காணி வழங்கப்படவிருப்பதான செய்தியும் வந்திருக்கின்றது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க உல்லாசப் பயணத்துறையை தூக்கி நிமிர்த்தவேண்டும் என்ற போர்வையில் திருமலை ஆலயக்காணி உல்லாசப் பயணத்துறையை இலக்குவைத்து அபகரிக்கப்படவும், விவசாயத்துறையை தூக்கி நிமிர்த்த என்ற போர்வையில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக என்ற போர்வையில் கொஞ்ச நஞ்சமல்ல ஆயிரத்து எண்ணூறு ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நமது மக்களுக்காக எது முக்கியமானது என்பதை தெரிவு செய்வதில் கூட நமது அரசியல்வாதிகள் வில்லாதி வில்லர்கள்தான் போங்கள்.!
- ஊர்க்குருவி