புதிதாக லொரி ஒன்றை வாங்கிய ஒருவர் டிரைவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு டிரைவரை வண்டியை ஓட்டச் சொன்னார்.
வண்டி ஓடத் தொடங்கியதும், ‘கடமுட’ என்று ஒரு சத்தம் கேட்டது.
உடனே அவர் என்ன சத்தம் கேட்குது? என்று டிரைவரைக் கேட்டார்.
நான் கியரை மாற்றினேன்.
அதனால்தான் அந்த சத்தம் என்றார் டிரைவர்.
‘நான் பக்கத்தில் இருக்கும் போதே நீ கியரை மாற்றினால் நான் இல்லாத போது நீ என்ன செய்ய மாட்டாய்? என் வண்டியை விட்டு இறங்கு’ என்று கோபத்துடன் கத்தினார், அவர்.
நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் நமது கூட்டமைப்பு எம்.பி.சிறிதரன், பலாலி விமானநிலையம் குறித்து எழுப்பிய கேள்வியும் அதற்கு துறைசார்ந்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அளித்த பதிலும் வாசகர்கள் படித்திருப்பார்கள்.
யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகளை நடத்த இந்தியா – இந்தியன் எயார் லைன்ஸ் ஆர்வமாகவே இருக்கிறது.
அரசாங்கமே சலுகைகளை வழங்காமல் இருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார் சிறிதரன் எம்.பி. அதற்கு பதிலளித்த அமைச்சர், யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்துக்கு சேவையை நடத்த விரும்பும் இந்திய விமானங்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்குகிறது.
ஆனால், சேவையை வழங்க இந்திய விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்திருந்தார்.
பலாலி விமான நிலையத்திற்கு இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட போதிலும் அங்கு பணியாற்றுகின்ற ஊழியர்கள் தொடந்து அங்கே பணியாற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அதற்காக அரசு தொடர்ந்து பணத்தை செலவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றது என்றும் அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததும் ஞாபகமிருக்கலாம்.
திருக்கேதீஸ்வர ஆலய கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக அதில் கலந்துகொள்ள வரும் தமிழக பக்தர்கள் வருவதற்கு வசதியாக அதனை மீண்டும் இயங்க வைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
நிச்சயமாக அது மீண்டும் இயங்கும் என்றும் கூறப்பட்டது.
அதிகம் ஏன், ஒரு விமானசேவை நிறுவனத்தின் பெயரில் பயண ரிக்கட்டுகளுக்கான விலைகள் கூட சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டன.
ஆனால், எதிர்பார்க்கப்பட்டது போல விமானசேவை நடைபெறவில்லை.
அதன்காரணத்தை அறிய அப்போது அந்த விமானசேவை நிறுவனத்திடம் இந்த ஊர்க்குருவி தொடர்புகொண்டபோது, சில விடயங்களை அறியமுடிந்தது.
பலாலி விமான நிலையத்தில் தற்போதைய ஓடுதளத்தின் நீளம் தொழாயிரத்து ஐம்பது மீற்றர்கள் மட்டுமே.
இந்த ஓடு தளத்தில் தரையிறங்கக்கூடிய விமானங்களில் பயணிகள் பதினைந்து கிலோவுக்கும்குறைவான பொதிகளையே தம்மோடு கொண்டுவர அனுமதிக்கமுடியும்.
அவ்வாறு கட்டுப்படுத்துகின்ற போது பயணிகள் இந்த சேவையை பயன்படுத்த விரும்பப்போவதில்லை.
பொதுவாக சென்னைக்கோ அல்லது தமிழகத்தின் மற்றைய இடங்களுக்கோ சென்று வருகின்ற பயணிகள் நாற்பது கிலோவுக்கும் கூடிய பொதிகளையே எடுத்துவருவர்.
இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கின்ற போது அதனை பயன்படுத்த பயணிகள் பின்னடிப்பதே விமான சேவை நிறுவனங்கள் பலாலிக்கு தமது சேவையை தொடங்க பின்னடித்து வருவதற்கு பிரதான காரணம்.
கோவிட் தொற்று வந்திருக்காவிட்டாலும் சேவையை ஆரம்பித்த அந்த நிறுவனம் தனதுசேவையை நிறுத்தவேண்டியே வந்திருக்குமாம்.
பலாலி சர்வதேச விமான நிலையமாக இயங்கத் தொடங்கிய போது, இனி புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் வரும் போது நேராக சென்னை வழியாக யாழ்ப்பாணம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்படி அவர்கள் வருவதானால் அவர்கள் தம்மோடு எடுத்துவரும் பொதிகளை இந்த விமானங்களில் எடுத்துவரமுடியாது.
இதனால் அவர்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாததாகியது.
நடுத்தர அளவிலான விமானங்கள் தரையிறங்கக்கூடியவாறு ஓடுபாதையை மூவாயிரத்து ஐநூறு மீற்றர்களுக்கு விஸ்தரித்தால் மாத்திரமே வர்த்தக ரீதியாக விமானங்களை இயக்குவதற்கு சாத்தியமாகும்.
இதனை செய்வதற்கு இந்தியாவின் உதவியைப் பெறுவதற்கோ அல்லது நிதி ஒதுக்கீட்டுக்கோ குரல்கொடுப்பதைவிட்டு, சலுகை வழங்காததால்தான் விமானங்கள் வரவில்லை என்று புகார் பட்டியல் வாசிப்பது, டிரைவர் கியர் மாற்றியபோது அதன் உரிமையாளர் கோவப்பட்டதுபோன்றது தான்.!
- ஊர்க்குருவி