நண்பர் ஒருவர் காலையில் தொலைபேசியில் அழைப்பில் வந்தார்.
லண்டனிலிருந்து அவர் அழைத்தபோது அங்கு அதிகாலை நேரம்.
என்ன இந்த நேரத்திலும் என்று கேட்டேன்.
உங்களோடு பேசுவதற்காகத்தான் என்றார்.
இலங்கையில் இருந்தபோது கொழும்பில் பத்திரிகை ஒன்றில் பணியாற்றியவர் அவர்.
ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக இருந்தபோதிருந்து அவரை அறிந்தவர்.
என்னைக் கேட்டார், ‘பாராளுமன்றத்தில் இப்போது ரணில் தரப்பில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?’ என்று.
அவர் தரப்பில் என்றால், அதுதான் முழு உலகத்துக்கும் தெரியுமே என்றேன்.
நீங்கள் சொல்கின்ற அந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் பற்றி நான் கேட்கவில்லை.
அவருக்கு எத்தனை பேர் இப்போது பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்குகின்றார்கள்? என்று திரும்பக்கேட்டார்.
அதுதான் அவர் ஜனாதிபதியாக போட்டியிட்டபோது நூற்றி முப்பத்தி ஐந்து பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்களே? என்றேன்.
அது அவருக்கு ஆதரவளித்ததாக சொல்லப்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்த்துத்தான் கேட்கிறார் என்ற நினைப்பில் அப்படி சொன்னேன்.
அது எல்லாம், இரகசிய வாக்கெடுப்பு நடந்தபோது.
இப்போது பகிரங்கமாக வாக்கெடுப்பு நடந்தால் எத்தனை பேர் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று கேட்டார்.
ஏதோ அங்கும் இங்கும் கிடைக்கின்ற தகவல்களை இந்தப் பத்தியில் எழுதப்போய், மனுசன் ஏதோ அங்கே நடப்பதெல்லாம் எனக்கு தெரியும் என்பதுபோல பேசுவது எனக்கு புரிந்தது.
அவர் விரும்பாவிட்டாலும் பொதுஜனபெரமுன கேட்கின்ற எல்லோரையும் இராஜாங்க அமைச்சராக நியமித்தபோதே நமக்குத் தெரியும்தானே அவர் என்ன நிலையில் இருக்கின்றார் என்பது.
பாராளுமன்றத்தை கலைக்கின்ற அதிகாரம் அவர் கையில் வரும்வரை அவர் பொதுஜன முன்னணியின் பணயக் கைதி நிலையில்தானே தொடரவேண்டும்? அடுத்த மார்ச் மாதத்தில்தான் பாராளுமன்றத்தைக் கலைக்கக்கூடிய அதிகாரம் அவர் கைக்குவரும்.
அதுவரை அவர் கத்தி மீது நடந்து கொண்டுதான் இருக்கவேண்டும் என்பது பற்றி ஏற்கனவே இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தது வாகசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
ரணில் பிரதமராக இருந்தபோது நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டுவந்த பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தத்தில் பாராளுமன்றத்தை கலைக்கின்ற அதிகாரத்தை தேர்தல் நடைபெற்று நான்கரை ஆண்டுகளின் பின்னரே கலைக்க முடியும் என்று மாற்றியவர் ரணில்.
அதனையே இரண்டரை வருடங்களாக மாற்றினார் கோட்டாபய, தனது இருபதாவது திருத்தத்தில்.
இப்போது, இன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வரப்படும் இருபத்திரெண்டாவது திருத்தத்தில் அது அப்படியே இரண்டரை ஆண்டுகளாகவே இருக்கின்றது.
இதனையே மீண்டும் நான்கரை ஆண்டுகளாக மாற்றவேண்டும் என்று பொதுஜனபெரமுன கட்சியினர் சிலர் கோரி வருகின்றனர்.
அப்படி மாற்றவில்லை என்றால் ரணில் பாராளுமன்றத்தைதான் விரும்பியவாறு கலைத்து விடுவார் என்பது அவர்களின் கவலை.
அதைவிட, கலைத்துவிடுவேன் என்று மிரட்டியே தனது அலுவல்களை செய்துமுடிப்பார் என்பது பொதுஜன பெரமுனவின் ‘தலை’யின் கவலை.
எங்கே ரணிலை தான் விரும்பியதையெல்லாம் செய்விக்க முடியாமல் போய்விடுமே என்பது அவரின் கவலை.
ரணிலைப் பொறுத்தவரை கோட்டாபய கொண்டுவந்த இருபதாவது திருத்தமே தொடர்ந்தாலும் பரவாயில்லை என்ற நிலை.
ஆனால், உலகத்துக்கு தான் தனது அதிகாரங்களையே விட்டுக்கொடுக்க விரும்புகின்றேன் என்று காட்டுவதற்காகவாவது இந்த திருத்தத்தைக் கொண்டுவர முயற்சிக்கவேண்டும்.
ஆனால், பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்ற முடியாவிட்டால் அது அவருக்கு எந்த பின்னடைவையும் தரப்போவதில்லை.
அதனால்தான், இப்போது பொதுஜன முன்னணியிலேயே ஒரு முப்பது பேர், நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்யக்கூடாது என்று புதிதாக கோஷம் எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.
இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டுமானால் நிறைவேற்று ஜனாதிபதி முறை இருக்கவேண்டும் என்று அந்த முப்பது பேரும் இப்போது குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
அதாவது ரணிலின் விருப்பத்துக்கு இப்போது பொதுஜன பெரமுனவிலேயே முப்பது பேர் அவருக்கு ஆதரவாக மாறியிருக்கின்றனர்.
அதாவது இப்போது ரணிலுக்கு பாராளுமன்றத்தில் முப்பது பேர் முழு ஆதரவோடு இருப்பது தெரியவில்லையா என்று கேட்டார் அந்த நண்பர்.
இப்போதுதான் அவர் எதைச் சொல்ல வருகிறார் என்பது புரிந்தது.
அப்ப, பாராளுமன்றத்தில் நாளை நடக்கின்ற வாக்கெடுப்பில் இருபத்திரெண்டாவது திருத்தம் நிறைவேறாது எண்டதைத்தானே சொல்ல வாறியள் என்று அப்புக்குட்டியர் ஸ்ரைலில் கேட்கத்தான் முடிந்தது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ரணில் முயன்று கொண்டிருக்கிறாரோ இல்லையோ, ஒவ்வொரு கட்சியையும் பலவீனப்படுத்துவதில் கவனமாகத்தான் இருக் கிறார் என்பது மட்டும் புரிந்தது.! – ஊர்க்குருவி