இப்படியும் நடக்கிறது…!

0
140

பாராளுமன்றம் ஒன்று பதவிக்காலம் முடிந்து கலைக்கப்பட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காக கலைக்கப்பட்டாலோ அதன் சபாநாயகரும் சேர்ந்து பதவி இழந்து விடுவார்.
புதிய பாராளுமன்றம் அமைந்ததும் புதியவர் தெரிவாவார்.
ஆனால், மாகாண சபைகளில் அப்படியல்ல.
அதன் அவைத் தலைவர் அல்லது தவிசாளர் அடுத்த மாகாண சபை பதவியேற்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார்.
மாகாண சபைக்கு புதிய தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் தெரிவாகி அந்த உறுப்பினர்களில் ஒருவர் அவைத் தலைவராக தெரிவாகும் வரை பழையவரே பதவியில் இருப்பார்.
மாகாண சபை கூடுகின்ற போது அதற்கு தலைமை தாங்குகின்ற அவைத் தலைவர், மாகாண சபைகள் இல்லாத போதும் பதவியில் தொடர்வார்.
மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளால் இயங்குகின்ற போது முதலமைச்சர், அமைச்சர்கள் பெற்றது போன்ற வரப்பிரசாதங்களை அவைத் தலைவரும் பெற்றுவருவார்.
அந்த வரப்பிரசாதங்கள் மாகாண சபை கலைக்கப்பட்டாலோ அல்லது அதன் ஆயுள்காலம் முடிவடைந்து விட்டாலோ அவைத் தலைவருக்கு தொடர்ந்து கிடைக்கும்.
வடக்கு – கிழக்கு மாகாண சபைகள் இரண்டும் இணைந்திருந்த போது அவை ஒரு சில மாதங்களே இயங்கின.
அதன் முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் தலைமையிலான அரசாங்கம் பதவியிலிருந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறில் வெளியேறிய பின்னர், இரண்டு மாகாணங்களும் ஒன்றாக இணைந்திருப்பதற்கு எதிராக ஜே. வி. பி. நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து அதனைப் பிரித்த பின்னரும் அவற்றுக்கு, அதாவது வடக்கு மாகாண சபைக்கோ, கிழக்கு மாகாண சபைக்கோ தேர்தல் நடத்தப்படவில்லை.
இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடக்கும்வரை வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையின் அவைத்தலைவராக இருந்தவர், சுமார் பதினெட்டு ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
இப்போது வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்த கடந்த பதினெட்டாம் ஆண்டிலிருந்து அதன் அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் இப்போதும் அவைத் தலைவர்தான்.
இவ்வாறு சகல சலுகைகளையும் பெற்றுக்கொண்டிருக்கும் ஒன்பது மாகாண சபைகளினதும் அவைத் தலைவர்களின் சலுகைகளை இரத்துச் செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்த முயற்சி பின்னர் பின்வாங்கப்பட்டிருப்பதாக இப்போது தெரிய வந்திருக்கின்றது.
அந்த ஒன்பது மாகாண சபைகளின் அவைத் தலைவர்களின் சலுகைகளையும் இரத்து செய்வதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அரசாங்கம் இரத்து செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போது கலைக்கப்பட்டுள்ள ஒன்பது மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கு (அவைத் தலைவர்கள்) வழங்கப்பட்டு வரும் சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகள் மற்றும் வசதிகளை இரத்து செய்வதற்கான தீர்மானம் ஒன்றை அமைச்சரவை ஏற்கனவே நிறைவேற்றியிருந்தது.
அந்த அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்ய இப்போது அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கு காரணம், மாகாண சபை சட்ட விதிகளின்படி மாகாண சபையொன்று கலைக்கப்பட்டு புதிய மாகாண சபை நியமிக்கப்படும் வரை மாகாண சபைத் தலைவர்களின் பதவி நடைமுறையில் இருக்கும்.
அந்தப் பிரிவின் பிரகாரம் மாகாண சபைத் தலைவர்களின் சிறப்புரிமைகள் மற்றும் சம்பளம் தொடர்பான நியதிச் சட்டங்களுக்கு மாகாண சபைகளும் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் மாகாண சபைத் தலைவரின் சிறப்புரிமைகளை இரத்து செய்ய முடியாது என மாகாண சபைத் தலைவர்கள் மன்றம் அரசாங்கத்துக்கு அறிவித்திருந்ததாம்.
கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்களின் சம்பளம் மற்றும் சிறப்புரிமைகள் இரத்து செய்யப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம் மற்றும் அந்த சம்பளம் மற்றும் சலுகைகளை மீளவழங்குவது தொடர்பான புதிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் தீர்மானம் நிச்சயம் அந்த ஒன்பது பேருக்கும் மகிழ்ச்சிக்குரியதுதான்.
மீண்டும் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடை பெற்று, பதவியேற்ற பின்னர் புதிதாக நியதிச்சட்டத்தை இயற்றி அவற்றை இரத்துச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லைத்தான்.
இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும்போது மனதில் எழுந்த சந்தேகத்தையும் தவிர்க்க முடியவில்லை.
நாடு இன்று எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில், அரசாங்கம் செலவீனங்களை எப்படிக் குறைக்கலாம் என்று பார்த்துப் பார்த்து குறைத்துக்கொண்டு வருகின்றது.
ஆனாலும், மாகாண சபைகள் தமது நியதிச் சட்டங்கள் மூலம் எழுதிய சட்டம் ஒன்றை மத்திய அரசாங்கத்தால், அதுவும் இந்த பொருளாதார நெருக்கடியான காலத்திலும் மீற முடியாதிருக்கின்றபோது, மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை என்று நாம் இப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது சரிதானா? என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை.!

  • ஊர்க்குருவி