கடந்த பத்தாம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கின் பிரச்னைக்கு அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னால் தீர்வு காணப்போவதாக அறிவித்தபோது மிகத் தெளிவாகவே எந்த எந்த பிரச்னைக்கு தீர்வுகாணப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பசுமை அபிவிருத்தி தொடர்பாகவே தீர்வுகாணப்போவதாக அறிவித்தார்.
அதற்கான பேச்சுகளை அடுத்த வாரமே தொடங்கப்போவதாக கூறியவர், ஒரு வாரத்தின் பின்னர், பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வந்திருந்தபோது, தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு வந்தால் பேச்சுக்கு தான் தயார் என்றார்.
இந்த விடயங்கள் குறித்து பல தடவை இந்தப் பத்தியில் குறிப்பிட்டாகிவிட்டது.
ஆனால், கடந்த புதனன்று வரவு – செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்புமீதான வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி, திடீரென்று இனப்பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் பேச்சு நடத்தப்போவதாகவும் அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டப்போவதாகவும் அறிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இனப் பிரச்சினை என்றோ அல்லது தமிழர் பிரசச்சினை என்பதையோ குறிப்பிடுவதைத் தவிர்த்த ரணில், திடீரென்று இரண்டு வாரங்களில் இனப்பிரச்னைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிகளையும் பேச்சுக்கு அழைத்தார்.
வழக்கத்துக்கு மாறாக, பாராளுமன்றத்திலேயே ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி நீங்கள் தயாரா? நீங்கள் தயாரா என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தபோதே, குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல, ‘நாங்கள் ரெடி, ஆனால் பதின்மூன்று பிளஸ் என்று உலகத்துக்கு உறுதியளித்த மகிந்த இப்போதும் அதற்கு ரெடியாக இருக்கிறாரா’, என்று கேள்வி கேட்க, மகிந்தரும் எழும்பி நாங்களும் ரெடிதான் என்றார்.
ஜனாதிபதி ரணில், கடந்த பத்தாம் திகதி பிரச்னைக்கு தீர்வு காண விரும்புவதாக கூறியதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ரணில் தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்றும் தமிழ் மக்கள் அவரின் கூற்றை நம்பி ஏமாறுவதற்குத் தயாராக இல்லை என்றும் தமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் தமிழர் பிர்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் அறிவித்தார்.
அதே சஜித், பதின்மூன்றிலிருந்து அதிகாரங்களை குறைக்கவோ அல்லது கூட்டவோ தான் அனுமதிக்கப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.
தமிழ் தேசியக் கட்சிகள் தமிழர் பிரச்னைக்கு பதின்மூன்று தொடக்கப்புள்ளியும் அல்ல என்று கூறிக்கொண்டிருக்க, சஜித் பதின்மூன்றுக்கு மேலே செல்லப்போவதில்லை என்று கூறிக்கொண்டு தமிழர் பிரச்னைக்கு ரணில் தீர்வு காண மாட்டார் எனவும் தன்னால் மட்டுமே தீர்வுகாணப்படும் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், ரணில் விடுத்த அறிவிப்புக்கும், இப்போது கடைசியாக விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் இடையே பாரிய வேறுபாடு ஏன் திடீரென்று ஏற்பட்டது என்பது குறித்து பலரும் புருவங்களை உயர்த்திக்கொண்டிருக்கின்றனர்.
இந்த இடைவெளியில் அப்படி என்ன நடந்தது என்பது குறித்து ஆராய முற்பட்டபோதுதான் அந்த விடயம் ஞாபகத்துக்கு வந்தது.
அண்மைக்காலமாக இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருப்பது குறித்து இந்தப் பத்தியில் எற்கனவே விலாவாரியாக பார்த்தோம்.
இப்போது இனப்பிரச்னைக்கு தீர்வுகாண விரும்புவதும் அதிலும் குறிப்பாக இந்த பதின்மூன்று பற்றி பேசப்படுவதும் நமது கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இந்தியாவும் பல ஆண்டுகளாக இந்த பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்துமாறே கேட்டுக்கொண்டிருக்கின்றது.
மகிந்த தரப்பும் இப்போது அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றது.
எதிரணி தரப்பும் தமது சம்மதத்தை தெரிவித்திருக்கின்றது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதனை தன்னால் செய்ய முடிந்தால், அது இந்தியாவை திருப்திப்படுத்துவதாக இருக்கும் என்று ரணில் தரப்பு கணக்குப் போட்டிருப்பதாக ரணிலுக்கு நெருக்கமான தரப்பு தகவல் தந்தபோது, இதைவிட முக்கியான செய்தி ஒன்றும் இப்போது கசிந்திருக்கின்றது.
அண்மையில், கொழும்பு வந்த இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் தலைவர் கோயல் ஜனாதிபதியுடன் நடத்திய அந்த சந்திப்பின் பின்னணியிலேயே இப்போது திடீரென்று ஜனாதிபதி ரணில் இனப்பிரச்னைக்கு தீர்வகாணும் முயற்சியில் குதித்திருப்பதாக நம்பப்படுகின்றது.
இன்னுமொரு சந்தர்ப்பம் நெருங்கி வந்திருக்கின்றது.
அதனையும் போட்டுடைக்கப் போகின்றோமா என்பதுதான் தெரியவில்லை.!
- ஊர்க்குருவி