இந்த ஊர்க்குருவி வாலிபனாக இருந்த காலம் அது. அதற்காக இந்த ஊர்க்குருவியை இப்போது வயோதிபர் என்று நினைத்துவிடாதீர்கள்.
தமிழகத்தில் இருந்து, திமுகவில் உறுப்பினராக இருந்திருந்தால், இளைஞர் அணியில்தான் இருந்திருப்பேன்.
அறுபது வயதைக் கடந்த பின்னரும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் இளைஞரணித் தலைவராக இருந்தார் அல்லவா? அப்படியெனில் இந்த ஊர்க்குருவியும் இப்போதும் இளைஞர்தான்.
வாலிபராக இருந்தபோது, ஓர் இடதுசாரித் தலைவர் யாழ்ப்பாணத்தில் தமது கட்சிக்காக பிரச்சாரக் கருத்தரங்கு ஒன்றை நடாத்தினார்.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஊர்க்குருவி, அந்த இடதுசாரித் தலைவரின் நீண்ட உரையைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, பார்வையாளர்கள் கருத்து சொல்லும் நேரத்தில் அந்தத் தலைவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டது இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது.
அந்தத் தலைவரைப் பார்த்து, “நீங்கள் உங்கள் இயக்கத்தில் சேருமாறு எங்களை எல்லாம் கேட்டீர்கள். அதற்காக நீண்ட விளக்கமும் தந்தீர்கள், நல்லதுதான்.
ஆனால், உங்கள் இந்த விளக்கங்களை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கவில்லையா?’’ என்று கேட்டபோது, அங்கிருந்தவர்களுக்கு ஏன் இந்த ஊர்க்குருவி இப்படியொரு கேள்வியைக் கேட்கின்றது என்பது புரிந்திருக்குமோ தெரியவில்லை.
ஏனெனில், அந்த விளக்க உரையை ஆற்றிய இடதுசாரித் தலைவரின் சகோதரர் ஒருவர் ஒரு தீவிர வலதுசாரி கட்சி ஒன்றின் முக்கிய செயற்பாட்டாளராக இருப்பது தெரிந்திருந்ததாலேயே ஊர்க்குருவி இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தது.
அதற்காக ஒரு குடும்பத்தில் ஒருவர் இடதுசாரி இயக்கத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள எல்லோரும் இடதுசாரியாகத்தான் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தவில்லை. ஒரு குசும்புத்தனமான கேள்விதான் அது.
அண்மையில் ஓர் ஊடக மாநாட்டில் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்த கருத்து ஒன்று தொடர்பாக இந்தப் பத்தியில் எழுதியிருந்தேன்.
தமிழ் மக்களுடன் சேர்ந்து இயங்காவிட்டால், முஸ்லிம் மக்களுக்கு அது ஆபத்தானதாக இருக்கும் என்று சுரேஷ் எச்சரித்திருந்தது குறித்து இந்தப் பத்தியில் எழுதியபோது, அவ்வாறு எச்சரிப்பதை விடுத்து, இருதரப்புக்கும் அது ஆபத்தானது என்று ஒரு நட்புரீதியாக அவர் கோரிக்கை விடுத்திருக்கலாம் என்று ஊர்க்குருவி எழுதியிருந்தது.
இதனை படித்திருந்தாரோ தெரியவில்லை, அண்மைக்காலமாக தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திவரும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் ராசபுத்திரன் சாணக்கியா, நேற்று முன்தினம் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.
வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ்-முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஒன்றாக வாழவேண்டும் என்பதை சிந்தித்து செயற்படவேண்டும் எனவும், அவ்வாறு இல்லாமல் போனால் வடக்கு-கிழக்கில் இரு சமூகமும் குறிப்பிட்ட காலப்பகுதியில் இல்லாமல்போகும் அபாயம் உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எந்த புரிதலில் அவர் அவ்வாறு சொன்னார் என்பது தெரியவில்லை. முஸ்லிம் சமூகம், மிகவிரைவாகவே கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை சமூகமாக மாறிவருகின்றது. அது மாத்திரமல்ல, முஸ்லிம் சமூகம், தான் எங்கு வாழ்ந்தாலும், அது குருநாகல் ஆக இருக்கலாம் அல்லது புத்தளம் மாவட்டமாக இருக்கலாம், ஏன் கேகாலை, களுத்துறையில்கூட இன்று தமது எம்.பி.க்களை தெரிவுசெய்கின்ற அளவிற்கு பலம்வாய்ந்த சமூகமாகவே இருந்துகொண்டிருக்கின்றது.
எந்த புரிதலில் அவர் அவ்வாறு சொன்னாலும், முதலில் அவர் தனது இக் கருத்தை எற்றுக்கொள்கின்ற முஸ்லிம் சகோதரர்களையும் இணைத்துக்கொண்டு அரசியலில் பயணம் செய்யவேண்டும். அவரது கருத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கக்கூடிய முஸ்லிம் சகோதரர்களை இணைத்துக்கொண்டு பயணிக்காதவரை, இது தமிழ் மக்களை மகிழ்விக்க சொல்லுகின்ற கருத்தாகவே கரைந்துசென்றுவிடும். தனது சகோதரரையே இடதுசாரியாக மாற்றமுடியாத இடதுசாரித் தலைவர் ஒருவர், மற்றவர்களை இடதுசாரி இயக்கத்தில் சேர்ப்பதற்காக வகுப்பெடுத்ததுபோலத்தான் இதுவும் ஆகிவிடும்!
– ஊர்க்குருவி