இப்படியும் நடக்கிறது…!

0
306

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் குழு ஒன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தமை இன்றுவரை தொடர்ந்து சர்ச்சைக்கு உரியதாகவே இருந்துகொண்டிருக்கின்றது.
இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்’ ஒன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நான்கு கடும் நிபந்தனைகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பிரதானி வில்லியம் பேர்ன் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார் என்று சாடியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.
அவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கா என்பது எப்போதுமே தீண்டத்தகாத ஒரு நாடுதான்.
அதே நாடு புலிகளை அழிப்பதற்கு உதவியபோது இனிப்பாக இருந்தது.
ஆனால், அதற்குப் பின்னர் வேண்டத்தகாத நாடுதான்.
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வருகை தந்தபோது, அவர்களை சந்திக்க நமது நாட்டு உளவுத்துறை பிரதானி சென்றபோது, அவரிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டே சந்திப்புக்கு அனுமதிக்கப்பட்டார் என்றும் இவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
புலனாய்வு தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்வது என்பது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆய்வுசெய்வது எமது இந்தப் பத்தியின் நோக்கமல்ல.
ஆனால், அமெரிக்க புலனாய்வு தகவல் ஒன்று தெரிவித்திருக்கும் செய்தி ஒன்றே நமது கவனத்தை பெற்றது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் பணத்தை எடுத்து வர அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என்று அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒன்று அண்மையில் தெரிவித்திருக்கின்றது.
இலங்கையின் ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட பெருந்தொகை – மூவாயிரத்து அறுநூறு மில்லியன் டொலர்கள் (முப்பத்தியாறு பில்லியன் டொலர்கள்) வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன என்று வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தகத்தை ஆராயும் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான Global Finance Integrity Institute தெரிவித்துள்ளது.
அதாவது, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்காக வெளிநாடுகளில் கிடைத்த பணத்தை ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளிலேயே வைத்திருக்கின்றனராம்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இரண்டு பில்லியன் டொலர்கள் கடனாகப் பெறுவதற்காக பல மாதங்களாக நமது அதிகாரிகள் மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், இலங்கைக்கு வரவேண்டிய அந்நியச் செலாவணி – முப்பத்தியாறு பில்லியன் டொலர்கள் வெளிநாடுகளில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பது மாத்திரமல்ல, அது தொடர்பான தகவல்கள் கிடைத்தும் அதனை நாட்டுக்குள் எடுத்துவருவதற்கு அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என்கின்றது அமெரிக்க புலனாய்வு நிறுவனம்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்தும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று இன்றுவரை கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் நாம், அதேபோல இப்படியொரு தகவல் கிடைத்தும் அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்பதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான்.
இந்தப் பணத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்கு மத்திய வங்கியோ அல்லது அதிகாரிகளோ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் அவை வைப்புச் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
எனினும், இலங்கை சுங்க திணைக்களம், ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் வெளிநாடுகளின் இறக்குமதி ஆவணங்கள் ஆகியவற்றின் விரிவான பகுப்பாய்வுகளின் பின்னரே இது கண்டறியப்பட்டது என்று தெரிவித்திருக்கின்றது.
முப்பத்தியாறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது, இலங்கையின் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாகும்.
இலங்கை தற்போது சுமார் எண்பத்தியொரு பில்லியன் டொலர் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.
இருப்பினும், ஏற்றுமதியாளர்கள் இலங்கைக்கு பணத்தை எடுத்து வருவதை தவிர்ப்பதற்கான காரணங்கள் என்னவெனில், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அனைத்து வெளிநாட்டு பணத்தையும் இலங்கைக்கு அனுப்பும்போது, தற்போதுள்ள சட்டத்தின்படி, அந்த டொலர்கள் இலங்கை ரூபாயாக மாற்றப்பட வேண்டும்.
அந்நியச் செலாவணியை ரூபாயாக மாற்றிய பின்னர் மீண்டும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நியச் செலாவணியைப் பெற முடியாது என்ற சந்தேகம் காரணமாகவே ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு நிதியை வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கின்றனர் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இவை எல்லாவற்றையும் பார்க்கின்றபோது, நமது நாடு திருந்துவதற்கு சந்தர்ப்பம் இருக்கும் என்று நம்புவதற்கு இடமே இல்லைப்போலும்.!

  • ஊர்க்குருவி