இப்படியும் நடக்கிறது…!

0
258

கொழும்பு அரசியலில் இப்போது நான்கு இடங்கள் மிகப் பரபரப்பாக இருக்கின்றனவாம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பப்படி சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து, அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதான யோசனையை அமைச்சரவை கடந்த வாரம் அங்கீகரித்திருந்தது.
எதிர்வரும் இருபத்தி ஐந்தாம் திகதி அது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அதற்கான அனுமதியை கோரும் தீர்மானம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனை எதிர்த்து வாக்களிக்க மிகச் சிலரே முன்வருவார்கள் என்பது ஜனாதிபதி அறியாததல்ல.
இன்றைய நிலையில் அது மிகப் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
அந்த அனுமதி கிடைத்த பின்னரே அதனைக் கொண்டு செல்ல தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனையை ஜனாதிபதி ரணில் விடுப்பார் என்று அவரே கூறியிருக்கிறார்.
தாம் ஜனாதிபதியைச் சந்தித்தபோது இந்த யோசனையை தம்மிடம் கூறினாரென மனோ கணேசன் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
அவ்வாறு ஜனாதிபதி ரணில் பகிரங்க அழைப்பு விடுத்ததும் அவரின் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயாராகும் எதிர்க்கட்சி எம். பிக்களை ஒருங்கிணைக்கும் பணி கொழும்பில் நான்கு இடங்களில் தற்போது நடந்து வருகின்றதாம்.
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜயவர்த்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார அகியோரின் இல்லங்களில் தொடர்ந்து நடந்து வரும் பேச்சுகளையடுத்து, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன வீட்டில்
கடைசிக்கட்ட பேச்சுகள் நடந்து வருகின்றனவாம்.
இதனால் கடந்த சில நாட்களாகவே இந்த நால்வரின் இல்லங்களும் பரபரப்பாக இருந்து கொண்டிருக்கின்றன.
இன்றைய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் இரட்டை இலக்கங்களில் கட்சி மாறுவதற்கு தயாராகி வருகின்றனரெனவும் அந்த எம். பிக்கள் மாத்திரமன்றி, கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலரும் (எம்.பிக்கள் அல்லாதவர்கள்) இவர்களுடன் இணைந்து கொள்ளவிருக்கின்றனர் என்கின்றன கொழும்புத் தகவல்கள்.
இது, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வருபவர்கள் தொடர்பான தகவல்கள் என்றால், இன்னுமொரு புறம் ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமோர் எம்.பியான பாட்
டாளி சம்பிக்க ரணவக்க தலைமையில் மற்றுமொரு நகர்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் மே இருபத்தி இரண்டாம் திகதி, அவர் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கவிருக்கிறார்.
ஐக்கிய குடியரசு முன்னணி என்ற பெயரில் அவர் ஆரம்பிக்கவிருக்கும் புதிய அரசியல் கட்சியில், பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சுயேச்சையாக
இயங்கிவரும் பலரும் இணையவிருக்கின்றனர்.
அவர்கள் மாத்திரமன்றி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து அரசுடன் இங்கிவரும் நிமால் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர போன்றவர்களும்
இந்த முன்னணியில் சங்கமமாக இருக்கின்றனர் என்கின்றன சம்பிக்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
ஜனதிபதி வேட்பாளராவதற்காக நாற்பத்தி மூன்றாம் படையணி என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்து செயல்பட்டு வந்த சம்பிக்க அடுத்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துவிட்டாரெனவும் ஆனால், பின்னர் நடக்கும் பாராளுமன்றத்தேர்தலை இலக்கு வைத்து இந்த முன்னணியை இப்போது தொடங்குகிறார் என்றும் அந்த முன்னணியும் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பரந்த கூட்டணி ஒன்றுடனேயே தேர்தலை சந்திக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
என்ன இருந்தாலும் அடுத்த வாரம் இலங்கை அரசியலில் பல அதிரடித்திருப்பங்களும் பரபரப்புக்களும் நிறைந்த வாரமாகவே இருக்கும் என்பது தெரிகின்றது.

  • ஊர்க்குருவி