பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அந்தப் பதவியில் இருந்து பாராளுமன்றத்தால் நீக்கப்பட்டிருக்கின்றார்.
மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் அவருக்கும் துறைசார்ந்த அமைச்சருக்கும் இடையே மோதல் உருவாகியதும் அது நாளடைவில் பெரிதாகி இன்று அவரை பாராளுமன்றத்தின் உதவியுடன் வெளியேற்ற வேண்டி வந்ததும் துரதிர்ஷ்டமானதுதான்.
மின்சார கட்டணத்தை அதிகரிக்க அமைச்சர் (அரசுதான்) நடவடிக்கை எடுத்தபோது அதற்கு எதிராக அவர் குரல்கொடுத்தார்.
அப்போது, அவர் சாதாரண மக்களின் குரலாக ஒலிக்கிறார் என்றே இந்த ‘ஊர்க்குருவி’யும் நம்பியதுண்டு.
விலை அதிகரிப்புக்கு முன்னதாகவே மின்சாரத்தை துண்டிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டபோதும் அமைச்சரின் முடிவுடன்
அவர் அடிக்கடி முரண்பட்டதையும் முன்னர் காணமுடிந்தது.
பின்னர், சாதாரண தர பரீட்சை நடைபெற்ற காலத்தில் சில மணிநேர மின்வெட்டை மின்சார சபை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டபோது, பரீட்சை நடைபெறும்போது மின் துண்டிப்பை செய்யக்கூடாது என்று அவர் உத்தரவு
போட்டபோது அதனை மின்சார சபை கண்டுகொள்ளவில்லை.
அவர் கடைசியாக மனித உரிமைகள் ஆணையம், நீதிமன்றம் என்று ஏறி இறங்கியபோது அவரை எல்லோரும் ‘ஹீரோ’வாகவே பார்த்தனர்.
ஆனால், இந்த ஊர்க்குருவியிடம் அப்போது ஒரு கேள்வி இருந்தது.
பரீட்சை நேரத்தில் மூன்று மணி நேரம் மின் தடை வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற வாதம் சரியானதுதானா? இரண்டு ஆண்டுகள் பரீட்சைக்காகக் கல்வி கற்று, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை நடக்கும் அந்த நாட்களில் தானா கல்வி கற்கின்றனர்.
அதுவும் மூன்று மணி நேரம்? பரீட்சை நடைபெறும் காலத்தில் ஒரு மூன்று மணி நேரம் மாணவர்கள் ஓய்வு எடுக்காமல்தான் படிக்கின்றனரா என்று மனதில் எழுந்த கேள்வியை தவிர்க்க முடியவில்லை.
அதனால்தானோ என்னவோ பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவரின் அந்த கோரிக்கைக்கு ஆதரவாக பெருமளவான ஒரு மக்கள் கோரிக்கை – அல்லது அவரின் கோரிக்கைக்கு ஆதரவான நிலைமை நாட்டில் ஏற்படவில்லை.
பின்னர், அவர் கட்டண அதிகரிப்புக்கு எதிராக குரல் கொடுத்தபோதும் மக்கள் தமக்காக அவர் குரல் கொடுக்கிறார் என்று நம்பியிருந்தால் அவரோடு நின்றிருப்பார்களோ தெரியவில்லை.
தனி ஒருவராக அவர் போராடியபோது, அவரின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை சரியானது என்று மக்கள் நம்பியிருந்தால் – எதிர்க்கட்சிகளும் அதற்கு ஆதரவாக – அதாவது அவருக்கு ஆதரவாக அப்போதே நின்றிருக்க வேண்டாமா? இவற்றைப் பார்க்கின்றபோது தையிட்டியில் நமது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் புத்த விகாரயை அகற்றுமாறு கோரி மீண்டும் போராட்டம் நடத்துவதுதான் ஞாபகத்துக்கு வந்தது.
தனியார் காணியை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டதை தமிழர் தரப்புகள் மாத்திரமல்ல, நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதியும்தான் கண்டித்திருந்தார்.
தனியார் காணியை களவெடுத்தே தையிட்டியில் விகாரை கட்டப்பட்டதாக நாகவிகாராதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால், அது களவெடுக்கப்பட்டபோதே அதன் காணி உரிமையாளருக்கு பிரதேச சபை தகவலை வழங்கி அதனைத் தடுப்பதற்கு சட்ட ரீதியாக நீதிமன்றத்தை நாடுவதற்கு முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆக, காணி உரிமையாளர்கள் அது விடயத்தில் உரிய முறையில் அணுகியிருந்தால் விகாரை கட்டப்படுவதைத் தடுத்திருக்கலாம்.
அதாவது அந்தக் காணியில் கட்டப்படுவதைத் தடுத்திருக்கலாம்.
தையிட்டியில் ஏற்கனவே விகாரை இருந்த இடத்தில் – விகாரைக்கு சொந்தமான காணியில் – அந்த விகாரை கட்டப்பட்டிருந்தால், அதற்கு எதிராக இன்று யாரும் போராட்டம் நடத்தியிருக்க மாட்டார்கள்.
இப்போது, தனியார் காணியை அபகரித்து கட்டப்பட்ட விகாரையை அகற்றக்கோரி முன்னணியினர் போராட்டம் நடத்துகின்ற
போது, ஆகக்குறைந்தது அந்தக் காணியின் உரிமையாளரோ அல்லது பக்கத்து காணிகளின் உரிமையாளர்களோகூட அந்தப் போராட்ட களத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
அதுவல்ல, இன்று நாம் சொல்ல வருவது.
மக்களுக்காக போராட்டம் நடத்திய ஜனக ரத்நாயக்கா இன்று பதவியையும் இழந்து நிற்கின்றபோதும் அவரோடு மக்கள் நிற்பதாகத் தெரியவில்லை.
ஆனால், அவரோ தனக்கு கிடைத்த இந்த அறிமுகத்தை வைத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த நாட்டில் ஒரு பிரஜை, அதிகம் ஏன் இந்த ஊர்க்குருவி கூட கட்டுப்பணத்தை செலுத்த யாராவது உதவினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.
ஆனால், ஜனக ரத்நாயக்க இப்போது தான் போட்டியிடப்போகிறார் என்று சவால் விடுப்பதை பார்க்கின்றபோது, அதற்காகவே – அவர் பிரபல்யத்தை தேடுவதற்காக இப்படி முரண்டுபிடித்தாரோ என்று எண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நாட்டின் தலைவராக அரசியலில் வருவதற்கு யாரும் விருப்பம் கொள்வது தவறில்லைத்தான்.
ஆனால், அரசியல் என்பது வெறுமனே நேர்மை சம்பந்தப்பட்டதல்ல.
அல்லது திறமை சம்பந்தப்பட்டதல்ல.
ஏற்கனவே இந்த நாடு அரசியல் அனுபவமில்லாத ஒருவரிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு அல்லோலகல்லோலப்பட்டதை மறந்துவிட மக்கள் ஒன்றும் … அல்ல.
இது ஜனகவுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் பொருத்தமானது.
- ஊர்க்குருவி