கனடாவில் வாழும் ஒரு மூத்த ஊடக நண்பர், எப்போதும் நகைச்சுவையாக எழுதுபவர், பேசுபவர்.
கதை ஒன்றை அனுப்பியிருந்தார்.
நான் படித்துப் பார்த்ததுபோல நீங்களும் முதலில் படித்துப் பாருங்கள்.
துருக்கியில் வாழ்ந்த முல்லா என்று அறியப்பட்ட முல்லா நஸ்ருதீன் தலைசிறந்த அறிஞர்.
கல்விமான்.
அவர் அந்த நாட்டின் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.
ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்றபோது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார்.
அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் ‘மன்னரே, நீங்கள் அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக்கொண்டு திரிகிறார்’ என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டிவிட்டார்கள்.
உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.
அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசார் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார்.
பிறகு முல்லாவை நோக்கி, ‘இவர்கள் எல்லாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?.
ஏன் அப்படிக் கூறினீர்கள்? இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?’ என்று கேட்டார்.
‘இது என்னடா, சும்மா வாய்ப்பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா, அப்போ நீங்கள் குழப்பவாதிகள்தான், அதை நிரூபித்தால் போச்சுது’ என்று நினைத்து ‘அரசே என்னால் நிரூபிக்க முடியும்’ என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.
பின்னர் அவர்களிடம், ‘அறிஞர் பெருமக்களே.
நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப்போகிறேன்.
அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்’ என்றார்.
பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் ,’ரொட்டி என்றால் என்ன?’ என்று கேட்டார்.
அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள்.
அரசர் படிக்க ஆரம்பித்தார்.
ஒருவர் – ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.
இரண்டாமவர் – ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.
மூன்றாமவர் – இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.
நான்காமவர் – ரொட்டி என்பது வேகவைத்த மாவுப்பொருள்.
ஐந்தமவர் – ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.
ஆறாமவர் – அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி ஏழாமவர் – ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.
எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா, ‘அரசே ! ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரண கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.
யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா? இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்’ என்றார்.
இந்தக் கதையை ஏன் அவர் அனுப்பியிருந்தார் என்பதை அறிய அவரே கீழே குறிப்பு ஒன்றையும் எழுதியிருந்தார்.
‘தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை அனைவரும் இணைந்து ஒருமனதாக தன்னிடம் ஒப்படைத்தால் அதனை ஏற்றுக்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் ஐயா தெரிவித்திருந்த செய்தியைப் படித்ததும் இந்தக் கதைதான் ஞாபகத்தில் வந்தது.
தமிழரசுக் கட்சியில் பத்துப் பேரிடம் நீங்கள் கட்சியின் தலைவராக யாரை தெரிவுசெய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டு ஒரு தாளைக் கொடுத்தால், அவர்கள் அனைவருமே தங்கள் தங்கள் பெயர்களை எழுதித்தருவார்களோ என்னவோ?’ என்று எழுதியிருந்தார் நண்பர்.
அதற்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று அவரிடமே கேட்டு தகவல் அனுப்பினேன்.
சில நிமிடங்களிலேயே பதில் வந்தது.
தமிழரசில் உள்ள எல்லோரும் எழுதிய விடையும் பிழையானது இல்லைத்தானே.
அங்கே ரொட்டி பற்றி அவர்கள் எல்லோரும் எழுதிய விடையும் சரியானதுதான்.
ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு பதில்களை எழுதியதால் அவர்கள் குழப்பவாதிகள் என்று முல்லா மன்னனிடம் நிரூபிக்க அது உதவியது.
அதுபோலத்தான், தமிழரசுக் கட்சியினர் தங்கள் தங்கள் பெயர்களை எழுதித் தந்தாலும், அவர்கள் பதிலிலும் தவறில்லைத்தானே..
நண்பரின் விளக்கம் எதுவாக இருந்தாலும், அதற்காக சி.வி.கே ஐயா அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் அல்லர் என்பதல்ல.
அவர் சிறந்த நிர்வாகி.
வடக்கு மாகாண சபைக்கு நீதியரசருக்கு பதிலாக அவரையே முதல்வராக்கியிருந்தால் அந்த ஐந்து வருடங்களிலும் மாகாணத்தில் சில மாற்றங்களைச் செய்திருப்பார்.
அவரைப் போன்றவர்கள் பதவிகள் தன்னை நாடி வருவதை எதிர்பார்க்கவேண்டுமே தவிர பதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது.
இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவாவது தமிழரசு தனது தலைவரை தெரிவு செய்யவேண்டும்.
அது மீண்டும் மாவையாக இருந்தாலும் சரி.!
- ஊர்க்குருவி