இப்படியும் நடக்கிறது

0
147

அண்மைக்காலத்தில் நடக்கும் சில சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இலங்கை அரசியலில் என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ளலாம் என்கிறார் தெற்கின் மூத்த அரசியல் ஆய்வாளர் ஒருவர்.
அவரின் கருத்தைக் கேட்டபோது, தெற்கிலும் ஆய்வாளர்கள் நம்மைப்போலத்தான் யோசிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு நாடுகளுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கு நாடுகளை நோக்கி கைநீட்டி சில விடயங்களை உரக்கச் சொன்னார்.
ஜேர்மனியில் ஒரு முக்கிய தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், ஐக்கிய நாடுகள் சபையையும் ஜெனிவா மனித உரிமை பேரவையையும் கண்டித்தார்.
மேற்கு நாட்டவர்கள் எங்களை தரக்குறைவாகவே பார்க்கிறார்கள் என்றும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அது முடிந்து நாடு திரும்பியதும், சீனாவுக்கு பயணம் செய்து அவர்களின் பட்டு சாலை திட்டத்தின் பத்தாவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு அதனைப் பாராட்டினார்.
இந்த சம்பவங்களை தொகுத்துப் பார்த்தால், அவர் தான் மேற்குலகின் ஆள் என்ற விம்பத்தை மாற்றியமைக்க முயல்கிறார் என்று சிலரும் சீனாவிடம் சரணடைய விரும்புகின்றார் என்று வேறு சிலரும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.
இதனால்தான், அமெரிக்க தூதுவர் அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்கு சென்று அவர்களைச் சந்தித்து படங்களுக்கு ‘போஸ்’ கொடுத்து திரும்பினார்.
அவரின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா தமக்கு வேறு தெரிவுகளும் இருக்கின்றன என்று ரணிலை எச்சரித்திருக்கின்றது என்றும் தெற்கில் சில ஆய்வாளர்கள் கருத்துத்தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால், ரணில் அப்படி இந்த நேரத்தில் அதனைச் செய்ய முயற்சிப்பாரா என்பது உறுத்தலுக்குரிய கேள்வியாக இருந்தது.
இலங்கையின் ஆட்சியிலுள்ளவர்கள் தங்களுக்கு வேண்டப்படாதவர்களாக இருந்தால், அவர்களை பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு அமெரிக்காவும் மேற்கு
நாடுகளும் மாத்திரமல்ல, நமது பக்கத்து நாடும் என்ன செய்யும் என்பதை ரணில் அறியாதவரல்ல.
இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டில் ராஜபக்ஷ சாம்ராச்சியத்தை வீழ்த்துவதற்காக அந்த நாடுகள் எப்படியெல்லாம் திட்டமிட்டு பணியாற்றின என்பதை முழுமையாக அறிந்து வைத்திருப்பவர் ரணில்.
அவ்வாறு இருக்கையில் அப்படியொரு விஷப்பரீட்சையில் அவர் ஈடுபட முயலப்போவதில்லை என்பதை அவரை அறிந்தவர்கள் அறிவார்கள்.
அமெரிக்க தூதுவர் தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு சென்று வந்தமை பற்றி நண்பர் ஒருவர் சிலாகித்தபோது, ‘அறகலய’ – போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அடிக்கடி அவர் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சென்று சந்தித்து வந்ததை அவருக்கு நினைவூட்டினேன்.
அப்போதெல்லாம் கோட்டாபய அமெரிக்கா தன்னுடன்தான் இருக்கின்றது என்று நம்பிக்கொண்டிருந்தார்.
ஆனால், இன்று மீண்டும் அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக அவர் முயல்கின்றபோதிலும், அவரின் விண்ணப்பத்தைக்கூட வாங்குவதற்கு அமெரிக்கத் தூதுவர் தயாராக இல்லையே கவனித்தீர்களா என்று கேட்டேன்.
அந்த நண்பரிடம் பதில் இருக்கவில்லை.
அவருக்கு நான் சொன்னேன், ‘நீங்கள் எனது நல்ல நண்பர், உங்களைப் பற்றி நான் வேறு ஒருவரிடம் சற்று கடுமையாக கருத்தைச் சொல்லிவிட்டு, நான் எதற்காக அப்படிச் சொன்னேன் என்று உங்களிடமே சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்தானே.
அதனைத்தான் ரணிலும் செய்திருக்கிறார் என்று நினைக்கின்றேன்.
சீனாவிடமிருந்து காரியங்களை செய்து முடிப்பதற்காக நான் உங்களை கடிந்துகொள்வேன், கண்டுகொள்ளாதீர்கள் என்று சொல்லிவிட்டு செய்கிறாரோ என்னவோ’ என்றேன்.
இப்போது தேசிய மக்கள் சக்தி, ரணிலை வீழ்த்துவதற்கு எப்படியெல்லாம் தயாராகின்றது என்பதை அமெரிக்க தூதுவர் ஊடாக ரணில் அறிந்து வைத்தி
ருப்பாரோ என்னவோ?

-ஊர்க்குருவி.