இப்படியும் நடக்கிறது

0
155

யுத்தம் நடந்துகொண்டிருந்த அந்தக் காலத்தில் நடந்த சம்பவம் ஒன்றை ஓர் அரசியல்வாதி அண்மையில் தெரிவித்ததுதான் இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது.
விடுதலைப் புலிகள் மிகப் பெரிய தாக்குதல் எதனையும் நடத்தி அதன்மூலம் சிங்கள மக்களுக்கு மிகப்பெரிய இழப்புக்கள் ஏற்பட்டுவிட்டால், உடனே
அரசாங்கம், அந்தச் செய்திகள் சிங்கள மக்கள் மத்தியில் சென்றடைந்து மக்கள் பெரும் கிளர்ச்சி எதனையும் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த
தாம்.
அப்படி எங்காவது புலிகள் தாக்குதல் நடத்தினால் உடனே, இலங்கை கிரிக்கட் அணி உலகக் கோப்பையை வென்ற கிரிக்கெட் போட்டியின் கடைசி ஆட்டத்தை இலங்கையிலுள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஆகக்குறைந்தது அரச தொலைக்காட்சிகளிலாவது மறுஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்துவிடுவார்களாம்.
அதாவது அதனை மறு ஒளி பரப்பு செய்தால், மக்கள் அதனைப் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார்களே தவிர வேறு எதனைப்பற்றியும் சிந்திக்க
மாட்டார்களாம்.
அதேபோலத்தான், புலிகளும் அப்படி ஏதாவது முக்கிய கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்ற போது இராணுவத்தளங்களை தாக்குவதற்கும் அந்த தினத்தை
தெரிவு செய்திருக்கின்றனர் என்கிறார் முன்னாள் புலிப் போராளி ஒருவர்.
ஏனெனில் முகாமிலுள்ள படையினர் அனைவரும் போட்டிகளை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
ஆகக்குறைந்தது காவலரண்களில் நிற்பவர்கள்கூட வானொலிகளில் போட்டி வர்ணனைகளைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
அந்த நேரத்தில் அவர்களின் கவனம் திசை திரும்பியிருக்கும்போது தாக்குதல் நடத்துவது சுலபம் என்கிறார் அவர்.
இவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடுவது, கிரிக்கட் இலங்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை குறிப்பதற்காகவே.
அது நமக்கு – அதாவது தமிழ் மக்களுக்கு அவ்வளவு முக்கியமானது அல்ல என்றாலும், அது சிங்கள மக்களைப் பொறுத்தவரை அவர்களோடு, அவர்களின்
வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து இருக்கின்றது.
அத்தகைய கிரிக்கட்தான் இப்போது அரசியலிலும் பேசுபொருளாகியிருக்கின்றது.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதோ, அல்லது பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதோ கூட சாதாரண சிங்கள மக்களுக்கு பெரிய பிரச்னை இல்லாமல் இருக்கலாம் ஆனால் சிறிலங்கா அணி அடுத்த உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடவே முடியாத நிலை ஒன்று ஏற்படுமானால், அதுவும் அரசியல்வாதிகளால் ஏற்படுமானால் அவர்கள் அதனைப் பொறுத்துக்கொள்ளப்போவதில்லை என்கிறார் சிங்கள ஊடக நண்பர் ஒருவர்.
கிரிக்கெட் சபையில் தற்போது நடக்கின்ற இழுபறிகள் எல்லாம் விளையாட்டு அமைச்சருக்கும், ஜனாதிபதி செயலகத்திலுள்ள முக்கிய அதிகாரி ஒருவருக்கும் இடையிலானதுதான்.
அந்த அதிகாரியும் அரசியல்வாதிதான் ஆனாலும் இப்போது அவர் அங்கு ஓர் அதிகாரி.
ஏற்கனவே அவருடன் பல அரசியல் ‘தலை’களுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்து, அது கட்சியையும் அரசையும் பல தடவைகள் நெருக்கடிக்குள்
தள்ளியிருக்கின்றது.
இப்போதும் நடந்துகொண்டிருப்பது அதுதான்.
தற்போதைய கிரிக்கட் சபையின் நிர்வாகத்தை மாற்றியமைக்காவிட்டால் சிறிலங்கா கிரிக்கட்டை காப்பாற்ற முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர்
நம்புகின்றார்.
அதற்காக அவர்களை வெளியேற்றிவிட்டு புதியவர்களை தெரிவுசெய்வதற்கு வசதியாக கிரிக்கெட் சபையை மறுசீரமைக்க முன்னாள் கிரிக்கெட் கப்டனும் அரசியல்வாதியுமான அர்ஜூன ரணதுங்கவை நியமித்தார் அமைச்சர்.
ஆனால் தற்போதைய சபைக்கு ஆதரவாக இருக்கும் அந்த அதிகாரி, அதற்கு எதிராக அவர்களைத் தூண்டிவிட்டு அர்ஜூனவின் நியமனத்திற்கு, மேல்நீதிமன்றம் ஊடாக இடைக்காலத்தடையை பெற்றிருக்கின்றனர்.
இதனால் இந்த விவகாரம் இன்று அரசியல் மயப்பட்டிருக்கின்றது.
அதுவல்ல பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருப்பது, இவ்வளவு விரைவாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு சர்வதேச கிரிக்கெட் சபை ஏன் அவசரமாக
இடைக்காலத் தடையை விதித்தது என்பது அறியாமல் உலகம் எங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தென்னாபிரிக்காவில் அந்த நாட்டின் அதிபர் நியமித்த ஆலோசனைச்சபைதான் அந்த நாட்டின் கிரிக்கெட் சபையை நிர்வகிக்கின்றது.
அதிகம் ஏன்? ஆப்கானிஸ்தான் கிரிக்கட் சபையை தலிபான்கள் நிர்வகிக்க வில்லையா? கிரிக்கெட்டில் அரசியல் என்று இலங்கையை மட்டும் அவசவம் அவசரமாக தடைசெய்திருப்பது ஏன் என்பது புரியவில்லை.
ஐசிசி என்ற சர்வதேச கிரிக்கெட் சபை என்பது இன்று இந்தியர்களின் கைகளில் இருப்பதும் ஒன்றும் இரகசியமானதல்ல.
ஆசிய கிரிக்கட் சபையின் தலைவராக இருக்கும் இந்தியரான ஜெய் ஷா, அங்கு பலம்பொருந்திய நபராக கருதப்படுபவர்.
அவருக்கும் இலங்கையின் கிரிக்கட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவுக்கும் இடையிலான உறவும் பகிரங்கமானவை.
எது எப்படியோ இந்த நெருக்கடியிலிருந்து ஜனாதிபதி வெளியே வரவில்லை என்றால், அது அவருக்கு நல்லதல்ல என்கின்றார் தெற்கு ஊடகர் நண்பர் ஒருவர்.

-ஊர்க்குருவி.