மாவீரர் வாரம் உணர்வுபூர்வமாக தமிழர் தாயகம் எங்கும் தொடங்கியிருக்கின்றது.
அதுமாத்திரமன்றி எமதுமக்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகள் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
தமிழ் மக்களின் விடுதலை ஒன்றையே தமது மூச்சாக நினைத்து தம்மை ஆகுதி ஆக்கியவர்களை – அவர்களின் தியாகங்களை எப்படி தமக்கு பயன்படுத்தலாம் என்றும் ஒரு கூட்டம் முட்டி மோதுகின்றது.
தத்தமது தேவைகளுக்காகவாவது அவர்கள் மாவீரர்களை நினைவு கூர்வதையும் பாராட்டித்தான் வேண்டும்.
தியாகி திலீபனின் நினைவிடத்தில் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டுவரை மாவீரர்களாகியவர்களின் பெயர்கள் அடங்கிய விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வரும்தமிழ் மக்கள் கூட்டணியின் பிரமுகருமான மணிவண்ணனின் ஏற்பட்டில் இந்த விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை இயங்கிய காலம் வரை, அவர்களால் ஆவணப்படுத்தப்பட்ட மாவீரர்களின் பெயர் விவரங்களே அவ்வாறு காட்சிப்படுத்தப்
பட்டிருப்பதாக தெரிகின்றது.
ஆனால் அதற்குப் பின்னரான காலத்தில் மாவீரர்களாகிய போராளிகள் விவரங்கள் எதுவும் அங்கே காணப்படவில்லை.
அவற்றைப் பெறுவது சிரமமானது என்பதும் நாம் புரிந்து கொள்ளக்கூடியதுதான்.
ஆனால் நமது வரலாறுகள் எல்லாமே இப்படி எப்போதும் அரை குறையாகவும் சரியான ஆவணப்படுத்தலின்றியுமே இருக்கின்றன.
இது பற்றி பல தடவைகள் இந்தப் பத்தியிலும் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம்.
உதாரணமாக நம் கண் முன்னே எரிந்து சம்பலான யாழ். பொதுநூலகம் எப்போது எரியூட்டப்பட்டது என்பதிலேயே பலரும் அவ்வப்போது பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அரைகுறையான பட்டியல் ஒன்றை இவ்வாறு காட்சிப்படுத்துவது எதிர்காலத்தில் இவர்கள் மட்டுமே மாவீரர்கள் என்று, வரலாறு தவறாக எழுதப்படுவ
தற்கும் காரணமாகிவிடும் என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
தங்களையே புலிகளின் பிரதிநிதிகள் என்று இப்போதும் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் தரப்புக்கள், முழுமையான மாவீரர் பட்டியல் ஒன்றைத் தயாரிப்ப தற்கான முயற்சிகளையாவது எடுக்கவேண்டும்.
அதைவிட போராளிகள் பெயரில் அரசியல் செய்யும் அனைவருமே அதற்கு முயற்சிக்க வேண்டும்.
இந்த மாவீரர் வாரத்தில்அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதும், ஆங்காகங்கே மாவீரர் குடும்பங்களை கௌரவிப்பதும் மாத்திரம் அவர்களுக்கு செய்யும் உண்
மையான அஞ்சலியாக இருக்கமுடியாது.
இன்று தமிழர் அரசியலில் இந்த மாவீரர்களுக்கு உரிய இடம் வழங்கப்படுகின்றதா? அப்படியெனில் அவர்களை விமர்சிப்பவர்கள், அல்லது அவர்களின் போராட்டத்தையே நிராகரிப்பவர்கள் எப்படி அரசியலில் இன்றும் நிற்க முடிகின்றது.
அதுகும் தமிழ் தேசிய அரசியலில் எப்படி முடிகின்றது?.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று விமர்சித்ததற்காக நடிகை குஷ்பு யாழ்ப்பாணத்திற்கு வரக்கூடாது என்று போராடுகின்ற நாங்களே, எங்கள் அரசியல் தலைவராக கருதுகின்ற சம்பந்தன் அதனை சொல்கின்றபோது அனுமதிக்கின்றோம்.
அவரை தமிழ் மக்களின் தலைவராக ஏற்றுக்கொள்கின்றோம்.
‘நான் புலிகளின் போராட்டத்தையே ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று சொன்ன ஒருவர் இருபதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதி ஆகி
றார்.
அதுகும் தமிழ் தேசிய அரசியலில் நடக்கின்றது என்றால், அதன் அர்த்தம், இந்தப் போராளிகளின் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் எதனையும் நாம் மக்கள் மத்தி
யில் கொண்டுபோய் சேர்க்கவில்லை என்றுதானோஅர்த்தம்.
நண்பர் ஒருவர் நேற்று பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார், ‘பாருங்கள் சிலர் மாவீரர் தினக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதையே தமது அரசியல் என்று எண்ணிக் கொண்டு அங்கும் இங்கும் தலைகாட்டுகின்றார்கள்.
ஆனால் அவரோ அதுபற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் தன் பாட்டில் அரசியல் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்’ என்றார் பெருமையாக.
இப்படி இருக்கின்றது நமது அரசியல்.
ஒவ்வொரு வருடமும் இதுபோல மாவீரர் நாட்களில் தீபம் ஏற்றுவதுடன் மாத்திரம் நமது கடமை முடிந்தது என்று கடந்து செல்லப்போகின்றோமா? அல்லது
அவர்களின் தியாகங்கள் பற்றி மக்கள் அறிந்துகொள்ளவும். அவர்களை கொச்சைப்படுத்துபவர்கள் மக்கள் மத்தியில் பணியாற்ற முடியாத அளவிற்கு அவர்களை மக்கள் மத்தியில் நிலைத்திருக்கச்செய்யப்போகின்றோமா?
-ஊர்க்குருவி.