இப்படியும் நடக்கிறது

0
121

இப்போதெல்லாம் யாராவது தொலைபேசியில் தொடர்புகொண்டால் அதனை ஏற்றுக்கொண்டு பேசுவதற்கு தயக்கமாக இருக்கின்றது.
யார் அழைப்பு எடுத்தாலும் கேட்கின்ற கேள்வி ஒன்றாகத் தான் இருக்கின்றது.
அது வெளிநாடுகளிலிருந்து வருகின்ற அழைப்பாக இருந்தாலும் சரி, உள்ளூர் பிரமுகர்களிடமிருந்து வருகின்ற அழைப்பாக இருந்தாலும் சரி எல்லோருமே கேட்பது ஒரே கேள்வி யைத்தான்.
அவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதுதான் கேள்வி.
அது எது சம்பந்தமான கேள்வி என்பதும் நான் எழுதித் தான் தெரியவேண்டும் என்பது அல்லவே.
தமிழரசு கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவுசெய்யப்படுவாரா? சுமந்திரன் தெரிவு செய்யப்படுவாரா? இந்தக் கேள்வியை தெற்கிலிருந்தும் நண்பர்கள் கேட்கத்
தொடங்கியிருக்கின்றனர்.
அவர்கள் எல்லோருக்கும் நான் சொல்வது, தமிழரசு கட்சியின் சரித்திரம் இந்தத் தடவை மாற்றி எழுதப்படாது என்பதுதான்.
இருவரில் ஒருவர் போட்டியிலிருந்து விலகிக்கொள்வார்கள் அல்லது அங்குள்ள கட்சி நலன்விரும்பிகள் சேர்ந்து புதிய ஒருவரை தலைவராக்க முயற்சி செய்வார்கள் என்பதுதான்.
சில மாதங்களுக்கு முன்னர், தமிழரசின் வெளிநாட்டுக்கிளை ஒன்றிலிருந்து மாவை சேனாதிராசாவின் தலைமையை மாற்றவேண்டும் என்பதில் அக்கறை கொண்ட சிலர் தாயகத்தில் பலருடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சிறீதரனும் சுமந்திரனும் போட்டி போட்டால் யாராவது ஒருவர் தானே வெற்றிபெறலாம்.
அப்படி நடக்கின்றபோது தோற்றுப்போகின்றவர் தனித்து இயங்க முயற்சி செய்யலாம்.
அப்படி நடந்தால் அது கட்சிக்கு மேலும் பின்னடைவை கொண்டுவந்துவிடும் என்பதால் இருவரும் இல்லாமல் வேறு ஒருவரை தற்காலிகமாகத் தலைவராக நியமிக்கலாம் என்றும் அதற்கு பொருத்தமானவர் யார் என்பது குறித்தும் அந்த வெளிநாட்டுக் கிளையினர் பல்வேறு தரப்பினரிடமும் அபிப்பிராயம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவ்வாறு அபிப்பிராயம் பெற்றவர்களின் தெரிவாக இருந்தது வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள் தான்.
அவர் அதற்கு பொருத்தமானவர்தான் என்று ஊர்க்குருவியும் அக்காலத்தில் எழுதியிருந்தது ஞாபகமிருக்கலாம்.
ஆனால், இப்போது தேர்தலில் போட்டியிடும் இருவருமே பிடிவாதமாக இருப்பதாகவும் தாமே வெற்றிபெறுவோம் என்பதில் இருவருக்கும் இருக்கும் அதீத நம்பிக்கையே அதற்குக் காரணம் என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு சில ஆயிரம் வாக்குகளைப் பெற்ற ஒருவரும் தேர்தலுக்கு முன்னதாக தான் வெற்றிபெறுவேன் என்றுதான் நம்பிக்கொண்டிருப்பார்.
தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று நம்பிக்கொண்டு யாரும் போட்டியிடுவதில்லைதான்.
அதனால்தான், இருவருமே தாங்களே வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் தத்தமது ஆதரவாளர்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் அடுத்த
தலைவர் இவர்தான் என்று பிரசாரம் செய்துவருகின்றனர்.
தமிழரசு கட்சியின் எழுபத்தி ஐந்து ஆண்டுகால சரித்திரத்தை இந்த முறை தலைவர் தெரிவு மாற்றி எழுதுமா என்பது தெரியவில்லை.
ஆனால், இருவரும் இல்லாத வேறு ஒருவரை தெரிவுசெய்வது என்று கட்சியில் பெரியவர்கள் முடிவெடுத்தாலும் அந்த வேறு ஒருவருக்கான தெரிவில் இனி சீ. வீ. கே. சிவஞானம் ஐயா இடம்பெறமுடியாது.
ஏனெனில், அவர் தற்போதைய வேட்பாளர்கள் இருவரில் ஒருவரான சுமந்திரனை தலைவர் பதவிக்கான தெரிவாக முன்மொழிந்திருக்கிறார்.
ஆக, இருவரில் ஒருவரை முன்மொழிந்த அவர், இப்போது சுமந்திரன் ஆதரவாளராக மாறியிருப்பதால் அவர் தெரிவாவது சாத்தியமில்லாது போயிருக்கின்றது.
கடைசியில் தேர்தல் இல்லை என்ற நிலைமை வந்தால், அதிகம் ஏன் மாவையே இன்னும் ஒரு தடவை தொடர்ந்தால் என்ன என்று கட்சிக்காரர்கள் முடிவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்று இந்தப் பத்தியில் இது பற்றி எழுதவேண்டும் என்று நினைத்ததற்கு காரணமே அவர் கேட்ட கேள்விஒன்றுதான்.
அவர் ஓர் அரசியல் கட்சியின் தலைவர்.
நேற்று அதி காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அவரும் கேட்டது அதே விடயத்தைத்தான்.
ஆனால், ‘அண்ணே… சிறீதரன் தானே சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம் என்று புகழ்ந்துபேசியவர்.
அவர் எப்படி இப்போது அவரை எதிர்த்து போட்டியிடுகிறார்?’ என்று கேட்டார்.
விடுதலை புலிகள் இயக்கத்தையும் தமிழரசு கட்சியையும் ஒன்றாக ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது.
ஆனாலும், அதற்கு – அதாவது புலிகள் இயக்கத்துக்கு எப்படி பாலசிங்கம் இருந்தாரோ அதேபோல தமிழரசுக் கட்சிக்கு சுமந்திரன் இருப்பதாக அவர் சொன்னதே
ஒரு விடயத்தை அழுத்திச் சொல்வதற்காகத்தானே? என்று சொன்னேன்.
அவருக்கு புரியவில்லை.
‘அண்ணே, சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம் இருந்தது போல இருக்கச் சொல்லியிருக்கிறார்.
தானே தமிழரசின் ‘பிரபாகரன்’ என்பதை அழுத்திச் சொல்வதற்காக’ என்றேன்.

  • ஊர்க்குருவி.