இப்படியும் நடக்கிறது

0
99

இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் இரவோடு இரவாக அம்பாந்தோட்டைக்கு விமானத்தில் சென்ற மகிந்த ராஜபக்ஷ மீண்டும் மைத்திரியுடன் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட போதிலும், ‘அவர் வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவி மகிந்தவுக்கு வழங்கமாட்டேன்’ என்று கடைசி நேரத்தில் மைத்திரி பல்டி அடித்தது ஞாபகமிருக்கலாம்.
கடைசி பிரசாரக் கூட்டத்தில் அப்படியோர் அறிவிப்பை மைத்திரி வெளியிடாமல் இருந்திருந்தால், வெற்றிலை சின்னத்தில் அப்போது போட்டியிட்ட மகிந்த அணிதான் அதிகூடிய ஆசனங்களை பெற்றிருக்கும்.
முதலில் காலையில் தன்னோடு அப்பம் சாப்பிட்ட மைத்திரி மாலையில் எதிரணிக்கு போனது ஞாபகம் இருந்தபோதிலும், அவரோடு இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட தன் தவறை உணர்ந்து கொண்டதால்தான் மகிந்த பொதுஜன பெரமுன என்ற கட்சியை புதிதாக ஆரம்பிக்க வேண்டியேற்பட்டது.
ஆனால், அவர் அப்படி புதிய கட்சியை ஆரம்பித்த போது அவரின் கட்சியை வடிவமைப்பதிலிருந்து கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது வரை பின்னாலிருந்து அவருக்கு ஆலோசனை வழங்கியது சீனா
என்பதும் ஒன்றும் இரகசியமானது அல்ல.
சீன கம்யூனிஸ்ட் கட்சிபோல அதனை கட்டியெழுப்ப அப்போது சீனா உதவியதாகக் கூறப்படுவதுண்டு.
தன்னைத் தோற்கடித்ததில் இந்தியாவின் உளவு அமைப்பான றோவுக்கு முக்கிய பங்கு உண்டு என்று பகிரங்கமாக அறிவித்தவர் மகிந்தர்.
ஆனால், கட்சியைப் புதிதாகத் தொடங்கி அவர்களின் ஆலோசனையைப் பெற்று கட்டியமைத்தவர், அதற்கு பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் – சீனாவை கண்டுகொள்ளாமல் பக்கத்து நாட்டோடு நெருங்கியது
அவர் செய்த தவறு என்பதையும் பின்னாளில் அவர் உணர்ந்து கொண்டிருப்பார்.
அதற்கு அவர் காரணமல்ல என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.
ஜனாதிபதியாக இருந்த கோட்டாபயவும் நிதி அமைச்சராக இருந்த பஸிலுமே இந்தியா பக்கம் சாய்வதில் முன்னின்றவர்கள்.
இதனால், கடைசியில் என்ன நடந்தது என்பது என்றும் இங்கே எழுதித் தெரியவேண்டும் என்பதல்ல.
இப்போது, சீனாவின் கைப்பிள்ளைகளான ஜே. வி. பியினர் இந்தியாவுக்கு பயணம் செய்திருப்பது எதற்காக என்பதும் நாம் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
இப்படியொரு சந்திப்புகளுக்காக சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னரே அவர்கள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் இப்போதுதான் அதற்கான அழைப்புக் கிடைத்ததாகவும் அவர்களுக்கு நெருக்கமான
வட்டாரங்களிலிருந்து தெரியவந்தது.
அடுத்து நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்படுமானால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை ஊகிப்பது சற்று கடினமானதாகவே இருக்கும் என்றே எதிர்வு கூறப்பட்டு வருகின்றனது.
எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெறமுடியாது போனால் இறுதியில் யார் அதிகம் பெறுகின்றாரோ அவரே வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதால் – அத்தகைய நிலைமை ஒன்று ஏற்பட்டால் சிலவேளைகளில் ஜே. வி. பி. வெற்றி பெறலாம் என்று கணக்குப்போடும் அமெரிக்காவும் இந்தியாவும் இரு முனை போட்டி ஏற்படுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்று கூறப்படும் நிலையிலேயே இந்தியாவை
நோக்கி செல்ல ஜே. வி. பி. முயன்றிருப்பதாக சொல்லப்படுகின்றது.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள்.
அதற்காக இன்று ஓர் அணியில் இருப்பவர் நாளை மற்றுமோர் அணிக்கு செல்வது ஒன்றும் ஆச்சரியமானது இல்லைத்தான்.
ஆனால், அப்படி அணி மாறினாலும் எவரும் தங்கள் அடிப்படை குணாம்சங்களை மாற்றிவிடுவதில்லை.
இந்திய எதிர்ப்பு என்ற ஒன்றையே தமது மூலதனமாகக் கொண்டு வளர்ச்சியடைந்தவர்கள், இன்று இந்தியாவை நோக்கி சொல்வது எதற்காக என்பதையும் புரிந்துகொள்வது கடினமானது அல்ல.
அதுவல்ல, இன்று நாம் சொல்ல வருவது.
கடும் சீன சார்பு அணியான ஜே. வி. பியே தமது தேவைக்காக இந்தியாவை நோக்கி நகர – அல்லது நகர்வது போலக் காட்டிக் கொள்கின்றபோது – எம்மை முழுமையாகக் கைவிட்ட பின்னரும் நாம்
இந்தியாவை நோக்கியே கைகளை நீட்டிக் கொண்டிருக்கப் போகின்றோமா? அல்லது இந்தியா சொல்வதுபோல, ஒரு தீர்வுக்காக தமிழ் தரப்புகள் எல்லாம் முதலில் ஒன்றுபட்டு, இந்தியாவை நோக்கி கை நீட்டப்போகின்றோமா? என்பதைத் தீர்மானிக்கவேண்டும்.!

  • ஊர்க்குருவி.