இப்படியும் நடக்கிறது

0
112

ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டவாறு ஒக்ரோபரில் நடக்கும் என்று அரசாங்கத்தின் சார்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடக்கலாம் என்றும் அதற்கான ஆயத்தங்களைச் செய்யுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பணித்திருக்கிறார் எனவும் ஒரு செய்தி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
மறுபுறத்தில் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தருமாறு முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையிலான குழு ஒன்றிடம் கேட்கப்பட்டிருக்கின்றது என்றும் அந்த அறிக்கை கிடைத்ததும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிடுகிறார் எனவும் ஒரு செய்தி வெளிவந்திருந்தது.
ஆக, முதலில் எந்தத் தேர்தல் நடக்கும் என்பதில் கட்சிகளிடையே குழப்பமான நிலைமை.
முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் அதில் மூன்று வேட்பாளர்களோ அல்லது அமெரிக்காவும் நேச நாடுகளும் விரும்புவதுபோல இரண்டு வேட்பாளர்களோ போட்டியிட்டால், அவர்களில் யார் இந்த நாட்டை இன்றைய நிலையில் வழிநடத்துவதற்கு பொருத்தமானவர் என்று சிந்தித்து அத்தகைய ஆளுமை உள்ள ஒருவர் வெற்றி பெறுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படலாம்.
அவ்வாறு ஜனாதிபதி வெற்றிபெற்ற பின்னர், அவருக்கு ஆதரவு வழங்கிய கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறுவதற்கே அதிக சந்தர்ப்பம் ஏற்படும்.
ஆனால், பாராளுமன்ற தேர்தல் முதலில் நடைபெற்றால் தமக்கே மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கட்சிகளினதும் மக்கள் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கின்றது என்பது வெளிச்சத்துக்குவந்துவிடும்.
இன்றைய நிலையில் பாராளுமன்ற தேர்தல் முதலில் நடைபெற்றால், எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாது என்றே நம்பப்படுகின்றது. இப்படியொரு நிலை வரும் போது, பாராளுமன்றம் ஒரு தொங்கு பாராளுமன்றமாக இருக்கும்.
மறுபுறத்தில் தத்தமது செல்வாக்கு எந்தளவுக்கு இருக்கின்றது என்பதைத் தெரிந்த பின்னர், எத்தகைய கூட்டணி ஒன்றை ஏற்படுத்தினால் யார் வெல்லலாம் என்று கணக்குப் போட்டு ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமைக்க உதவும் என்று ஜனாதிபதி கணக்குப் போடுகிறார் என்றும் தெற்கில் நம்பப்படுகின்றது. பாராளுமன்றத்திற்கு அவ்வாறு தேர்தல் முதலில் அறிவிக்கப்பட் டால் நமது தமிழ் அரசு கட்சியின் நிலை எப்படியிருக்கும் என்பதை இப்போது கணிப்பது சற்றுக் கடினமானதுதான்.
வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு பொதுச்சபை கூடி ஒரு பொது இணக்கப்பாடு ஏற்பட்டாக வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் கட்சி யாப்பின்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படவேண்டிய வருடாந்த மாநாடு கூட்டப்படவில்லை என்றும் தற்போது இருக்கும் தலைவர் பொதுச் செயலாளர் உட்பட்ட செயல் குழு இயங்குவதை தடை செய்யவேண்டும் என்றும் யாராவது ஒருவர் இன்னுமொரு வழக்கைத் தாக்கல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதிகம் ஏன் தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்தாலும் கட்சி சிக்கலுக்குள்தான் அகப்பட வேண்டியிருக்கும்.
இது தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ் அரசின் இன்றைய நிலை.
சிலவேளைகளில், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து தமிழ் அரசுக் கட்சியை தூசி தட்டி எடுத்ததுபோல, ஏதாவது ஒரு தற்காலிக ஏற்பாடு செய்யவேண்டி வருமோ தெரியவில்லை.
தமிழ்த் தேசிய அரசியலை நேசிக்கின்ற எவரும் தமிழ் அரசின் இன்றைய நிலையை எண்ணி கவலையடையாமல் இருக்க முடியாது.
அதுவல்ல, இன்று நாம் சொல்ல வருவது, ஜனாதிபதி தேர்தலா? பாராளுமன்ற தேர்தலா? அதுவும் இல்லாமல் முதலில் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்ய அனுமதி கோரும் சர்வஜன வாக்கெடுப்பா முதலில் நடைபெறும் என்று தெரியாமல் தெற்கு அரசியல் கட்சிகள் குழுப்பிப்போய் இருக்க, அப்படி எதுதான் முதலில் நடக்கும் என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களில் கேட்டபோது, சிரித்துக்கொண்டே ‘இல்லை இல்லை முதலில் திட்டமிட் டவாறு ஜனாதிபதித் தேர்தல்தான் நடக்கும்’ என்றது ஒரு தரப்பு.
தெற்கில் கட்சிகளை குழப்பத்தில் வைத்திருக்க வழக்கமான தனது அரசியல் உத்தியையே ஜனாதிபதி ரணில் பயன்படுத்தி வருகின்றார் என்றது மற்றுமொருதரப்பு. எது எப்படியோ, கட்சிகளைப் பிரித்து தனது பலத்தை அதிகரிக்கும் வரை இதுபோன்ற குழப்பமான நிலையே தொடர்ந்து பேணப்படும் என்கின்றன தெற்கின் விசயமறிந்த வட்டாரங்கள்.
ஜனாதிபதியின் இந்த முயற்சியால் உண்மையில் கலகலத்துப் போயிருப்பது பிரதான எதிர்க்கட் சியான ஐக்கிய மக்கள் சக்திதான்.
அந்தக் கட்சிக்குள்தான் இப்போது பலரும் குழம்பிப் போயிருக்கின்றனராம்.
அந்தக் குழப்பத்தைத் தவிர்க்கவே அவசரம் அவசரமாக சிறுபான்மைக் கட்சிகளுடன் ஒப்பந்தம் போடும் முயற்சியை தொடங்கினாராம் கட்சியின் தலைவர். சிறுபான்மைக் கட்சிகள் தன்னோடுதான் இருக்கின்றன என்பதை சொல்வதன் மூலம் தனது கட்சிக்குள் ஏற்படும் பிளவை தடுக்கலாம் என்று நினைக்கின்றார் போலும். இலங்கை அரசியலில் எப்போதுமே இந்த சிறுபான்மைக் கட்சிகள் இதுபோன்ற நெருக்கடிக்கு உதவுவதற்கு பயன்படுத்தப்படுகின்றனவே தவிர, அவர்களின் சொந்த தேவைகளுக்காக அல்ல என்பதும் நமக்கு வழக்கமானதுதானே.

  • ஊர்க்குருவி.