இப்படியும் நடக்கிறது

0
118

ஆர்.ஆர். மறைந்தார் என்ற அந்தச் செய்தியை ஜீரணிக்க முடிய வில்லை.
அவருடனான ஊர்க்குருவியின் நட்பு மிகச் சிறியகாலம்தான் என்றாலும் மிக நெருக்கமானது என்பதால் அது ஜீரணிக்க முடியாததாக இருந்தது.
உள்ளூராட்சி தேர்தலுக்காக நியமனப்பத்திரங்கள் கோரப்பட்ட சில நாட்களில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு தனித்து செல்வதென்று முடிவெடுத் திருந்த காலம் அது.
அப்போது, தமிழ் தேசியக்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்றும் இவ்வாறு பிரிந்து பிரிந்து இருப்பது தமிழர்களின் எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல என்பதையும் ‘ஈழ நாடு’ தொடர்ந்து வலியுறுத்தி வந்தது வாசகர்கள் அறியாததல்ல.
ஈழநாடும் இந்த ஊர்க்குருவியும் ஒற்றுமையை வலியுறுத்திவந்த வேளையில், தமிழ் அரசு தனித்துப் போக முடிவெடுத்தது.
அதாவது மேலும் பிரிவினையை ஏற்படுத்தியது.
தமிழ் அரசு இவ்வாறு முடிவெடுத்ததும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்த மற்றைய இரண்டு பங்காளிக்கட்சிகளும் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத் தார்கள்.
கூட்டமைப்பிற்கு வெளியே இயங்கிக்கொண்டிருந்த தமிழ் தேசியக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு கூட்டமைப்பை இன்னும் பலமாக கட்டமைக்க முயன்றனர். அதற்காக ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோவிலிருந்து பிரிந்து தனித்து இயங்கிவரும் தமிழ் தேசியக்கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டுமன்றி, சி.வி. விக்னேஸ் வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையும் சேர்த்துக்கொண்டு பலமான கூட்டமைப்பாக மீண்டு எழ முயன்றனர்.
அவர்களின் அந்த முயற்சி வெற்றி பெறவேண்டும் என்று ஈழநாடும் விரும்பியதில் ஆச்சரியமிருக்காது.
அந்தக் காலத்தில்தான் ஆர்.ஆர். என்று அறியப்பட்ட இராகவனுடன் அடிக்கடி தொடர்புகொள்ள வேண்டியேற்பட்டது.
புளொட் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அவரை பல தடவைகள் சந்தித்திருந்தாலும் நெருக்கமாக அவரோடு உரையாடவோ, நட்பு பகிரவோ சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
ஆனால் இந்த கூட்டமைப்பின் பரவலாக்க முயற்சி பற்றி அறிய அவரோடு தொடர்பு கொண்டபோதுதான், அவ்வாறு கட்சிகளை இணைத்தாலும் எந்தக் கட்சியின் சின்னத்தின்கீழ் இயங்குவது என்பதில், அதாவது அடுத்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது என்பதில்தான் அவர்களுக்கு சிக்கல் இருப்பது தெரியவந்தது. அப்போதுதான் ஆர்.ஆர். ஒரு தகவலைச் சொன்னார்.
விடுதலைப் புலிகள் தமிழ் அரசியல் கட்சிகளையெல்லாம் ஒன்றிணைத்து கூட்டமைப்பை ஆரம்பித்தபோது அதில் இடம்பெறாமல் இருந்த புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். – பத்மநாபா (தற்போது அது தமிழர் சமூக ஜனநாயக்கட்சி) ஆனந்தசங்கரி ஐயா ஆகியோர் கொழும்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்ற பெயரில் பதிவுசெய்த கட்சி இருக்கின்றபோதிலும் அதில் புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். – பத்மநாபா ஆகிய இரண்டு கட்சிகளுமே இருப்பதாகவும், அது இரண்டு கட்சிகளுக்கும் சொந்தமானது என்பதால் நாம் அதுபற்றி தனித்து முடிவெடுக்கமுடியாது என்ற தகவலையும் ஆர்.ஆர். பகிர்ந்துகொண்டார்.
தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி யின் தலைவர் தோழர் சுகு என்று அறியப்பட்ட சிறிதரன் திருநாவுக்கரசு, இந்த ஊர்க்குருவிக்கு நெருக்கமான நண்பர்.
அந்தக் கட்சியை கடந்த இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பிற்குள் உள்வாங்க மாவை, சுமந்திரன் ஆகியோர் முன்வந்ததும், பின்னர் அந்த முயற்சி சில காரணங்களால் தடைப்பட்டும் போனது.
ஆனால் அவர்கள் அதற்கு பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமது இடதுசாரி தோழர்களான டி.யூ., திஸ்ஸ விதாரண, வாசுதேவ போன்றவர்களின் நட்பு காரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவை ஆதரிக்க முடிவெடுத்திருந்ததால், அவர்களை இப்போது தமது கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்வது சரியானதாக இருக்காது என்ற அவர்களின் வாதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.
ஆனால், தோழர் சுகுவை அந்த கட்சியிலிருந்து விலகுமாறு கேட்கின்ற நிலையில் தாங்கள் இல்லை என்றும் அதனைச் செய்யவே முடியாது என்றும் ஆர்.ஆர். கூறிய போது அவரது உண்மையான நட்பையும் மனிதத் தன்மையையும் அறியமுடிந்தது.
சுகுவிடம் பேசுகின்ற வேலையை இந்த ஊர்க்குருவி பொறுப்பெடுத்து, அவருடன் பேசியபோது அவர் சொன்னது, ‘சித்தர் கேட்டால் கொடுத்துவிடுவதில் தனக்கு எதுவும் இல்லை’ என்று.
ஆனால் சித்தார்த்தனோ, எந்தக் கட்டத்திலும் அவரை நீங்கள் விலகுங்கள் என்று சொல்ல முடியாது என்று திடமாக மறுத்துவிட, ஆர். ஆர். அதற்கு சிறிதளவு கூட சம்மதம் இல்லாமலே பின்னர் அவரோடு பேசவேண்டிவந்தது.
கடைசியில் சுகு அந்தக் கட்சியி லிருந்து வெளியேறியபோது, ஆர்.ஆர். கூறியிருந்தமை இப்போதும் ஞாபகம் இருக்கின்றது.
‘அண்ணே, முதல் தேர்தலில் அவர் நம்மோடு இல்லாவிட்டாலும், அதற்கு அடுத்த தேர்தலிலாவது சுகுவின் கட்சியை நாம் இணைத்தே ஆகவேண்டும்’.
இந்தச் சம்பவம் சித்தார்த்தன், மற்றும் ஆர்.ஆர். என்ற இருவர் மீதும் இந்த ஊர்க்குருவிக்கு இருந்த மரியாதையை மேலும் உயர்த்தியது.
அதுபோலவே, வடக்கு மாகாண சபையில் முக்கிய அமைச்சராக இருந்த ஒருவர் பின்னாட்களில் ஒரு தடவை மாகாண சபையிலிருந்தவர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது சொன்னார்: ‘தமது அணியில் இருந்தவர்களில் மிக நேர்மையானவர் என்றால், புளொட் சிவநேசனைத்தான் சொல்வேன்’ என்று. பின்னாளில் வடக்கு மாகாண விவசாய அமைச்சராக இருந்த சிவநேசன் பற்றி அவரைப்போலவே பலரும் சொல்லியதை கேள்;விப்பட்டிருக்கின்றேன்.
இன்றைய அரசியல்வாதிகளில் அந்த மூவரும் முன் உதாரணமானவர்கள் என்பதை ஆர்.ஆர். பற்றிய இந்தப் பத்தியில் பதிவுசெய்யவேண் டியது அவசியம் என்று நினைக்கின்றேன்.

  • ஊர்க்குருவி.