தமிழ் திரைப்படம் ஒன்றில் வந்த நகைச்சுவைக் காட்சிபோல, ‘வரும் ஆனா வராது’ என்று சொல்லிக் கொண்டிருந்த ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடக்கும் என்பதுபோல தெற்கில் நடக்கும் சம்பவங்கள் தெரிகின்றன.
நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கவேண்டும் என்பதில் அவ்வப்போது ஆர்வம் காட்டி வந்தவர் ரணில் விக்கிரமசிங்க.
அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.
அந்தப் பதவியை தேர்தல் ஒன்றின் மூலம்தான் அடைய முடியாது என்பதால் அவர் அப்படியொரு விருப்பத்தைக் கொண்டிருந்திருக்கலாம்.
இப்போதும் அவர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் நிச்சயமாக வெற்றிபெறக்கூடிய அளவுக்கு மக்களின் ஜனரஞ்சக கவர்ச்சி கொண்ட தலைவர் அல்ல.
அதனால், ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் மீண்டும் போட்டியிட்டு பரீட்சித்துப் பார்ப்பதைவிட, அந்தப் பதவியை இல்லாமல் செய்து பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமராக வருவதற்கே அவர் முயற்சிசெய்வார் என்று தெற்கில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே அவரும் தனது காய்நகர்த்தல்களைச் செய்துகொண்டிருந்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதுதொடர்பாக ஆராய்வதற்காக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் குழு ஒன்றை நியமித்தார்.
கூடவே முதலில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதாக செய்தி ஒன்றை கசிய விட்டாhர்.
இப்படி அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று தெரியாமல் எதிர்க் கட்சிகளை குழப்பிவிடும் பணியை செய்துகொண்டிருந்தார்.
ஆனால், அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கமுடியாது என்பதும், பாராளுமன்றத்தில் நிறைவேற்று அதிகார ஆட்சிமுறையை நீக்குவது தொடர்பாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானத்தைக் கொண்டுவந்தாலும் அதற்கும் மேலாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவேண்டும் என்பதால் இவை எல்லாம் இப்போது உடனடியாக சாத்தியமாகப்போவதில்லை என்பது தெரிந்ததுதான்.
இவ்வாறு பல்வேறு வியூகங்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்துகொண்டிருந்தாரே தவிர, ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாகக்கூட உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதனால், அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றபோது அவர் சிலவேளை போட்டியிடுவதிலிருந்தும் விலகலாம் என்ற எண்ணம் பலருக்கு இருந்தது.
அத்தகைய எண்ணத்தில் இருந்தவர்களில் முக்கியமானவர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க.
ரணில் திடீரென்று போட்டியிலிருந்து விலகினால் பொதுவேட்பாளராக தான் களம் இறங்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த சம்பிக்க அதற்காக தயாரிப்பு பணிகளிலும்
தீவிரமாக இருந்தார்.
ஜே. வி. பியின் பிரசாரம் ஊழலுக்கு எதிரானதாக இருந்ததே தவிர, இந்த நாட்டை மீண்டும் எப்படிக் கட்டியெழுப்பப் போகிறார்கள் என்பதிலோ அல்லது, வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிமிர்த்தப்போகிறார்கள் என்பதிலோ அவர்களிடமே திட்டம் எதுவும் இருக்கவில்லை.
எனவே, ஊழலுக்கு எதிரான முகமாக தன்னை ஏற்கனவே முன்னிறுத்தியுள்ள சம்பிக்க, நாட்டை எப்படி தன்னால் முன்னோக்கியும் நகர்த்த முடியும் என்றும் தனது
திட்டங்களை அறிவித்தார்.
இது ஜே. வி. பிக்கு எதிரான பொருத்தமான வேட்பாளர்தான்தான் என்பதை வெளிப்படுத்தும் என்றும் அவர் நம்பினார்.
கடைசியாக தனது ஐக்கிய குடியரசு முன்னணி சார்பில், ‘நமது தேசத்திற்காக ஒற்றுமையுடன் ஒரு அடி முன்னோக்கி’ என்ற தலைப்பில் பன்னிரண்டு அம்சக் கொள்கை
பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டிருந்ததுடன், அதுதொடர்பாக அரசியல் கட்சிகளுடன் உரையாடல் ஒன்றையும் ஆரம்பித்திருந்தார்.
அந்த உரையாடலுக்காக கடந்த வாரம் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின்
குழுவைச் சந்தித்த சம்பிக்க, தனது யோசனைகள் குறித்து விளக்கமளித்தார்.
அந்தச் சந்திப்பு இரு தரப்பினரிடையேயும் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்தியிருப்பதாக சம்பிக்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
ரணில் போட்டியிலிருந்து விலகுவார் என்ற எதிர்பார்ப்புடன், தனது வேலைத்திட்டங்களை செய்துவந்த சம்பிக்க, அவர் நிச்சயம் போட்டியிடுவார் என்றதும்-
அதுமாத்திரமன்றி அவர் ராஜபக்ஷக்களின் வேட்பாளராக இல்லாமல் சுயேச்சை வேட்பாளராக- கட்சிசாராத வேட்பாளராக களம் இறங்கவிருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அவருடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
இதனையடுத்து, தனக்கு ஆதரவு தர தயாராக இருக்கும் அணிகளை அதாவது ஐக்கிய தேசியக் கட்சி, நிமல் லான்சா உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, மற்றும் சிறீ
லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி தனித்து இயங்கிவரும் நிமல் சிறிபால டி சில்வா- மகிந்த அமரவீர- துமிந்த திஸநாயக்க அணி என்று அனைத்து
தரப்பினரையும் ஒன்றுபடுத்தி பலமான கூட்டணி ஒன்றை அமைக்கும் பணியை தலைமை தாங்கி செய்யுமாறு சம்பிக்கவை கேட்டிருக்கிறாராம் ரணில்.
தனக்கு சர்வதேச ஆதரவு பலமாக இருப்பதையும், விரைவில் உலக வங்கி நூறு கோடி டொலர் கடன் வழங்க சம்மதம் தெரிவித்திருப்பதையும் தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்று தொடர்ந்து செல்வதா இல்லையா என்பது குறித்து விரைவில் சர்வகட்சி கூட்டம் ஒன்றை நடத்தி அனைத்துக்
கட்சிகளின் சம்மதத்தையும் பெறவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இவை எல்லாம்தான் வெற்றி பெறுவதற்காக தான் முன்னெடுத்துவரும் முயற்சிகள் என்பதை சம்பிக்க புரிந்துகொண்டிருப்பார் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி
பின்னர் தனது கட்சிக்காரர்களுடன் பகிர்ந்து கொண்டாராம்!
- ஊர்க்குருவி.