இப்படியும் நடக்கிறது!

0
55

தமிழ் மக்கள் பொதுச்சபை நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பங்குகொள்ளாமல் இருக்கத் தீர்மானித்திருக்கின்றது. அவ்வாறு தீர்மானிப்பதற்கு அந்த அமைப்புக்கு முழு உரிமையும் இருக்கின்றது என்பதிலும் யாரும் கருத்து வேறுபாடு கொள்ளப்போவதில்லை. ஆனால், அது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கைதான் நமது கவனத்தைப் பெற்றது. அந்த ஊடக அறிக்கையின் முதலாவது பந்தியை முதலில் அப்படியே தருகின்றோம். ‘தமிழ் மக்கள் பொதுச்சபை ஈழத்தமிழ் மக்களின் விடிவை நோக்கிய பயணத்துக்கும் மக்களை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்கும் தொலைநோக்குடன் உருவாகியது.

அது தன்னைப் போதியளவில் ஒழுங்கமைத்து வலுவூட்டி விரிவாக்குவதற்கு முன்னரேயே மிகக்குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட சிறீலங்காவின் சனாதிபதித் தேர்தலை ஈழத்தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பரீட்சார்த்த களமாகக் கையாள்வதற்கு முன்வந்தது.’ அவர்கள் சொல்லவருவது, தாங்கள் மக்களை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்கும் தூரநோக்குடன் பொதுச் சபையை உருவாக்கினார்களாம். அதன் பின்னரே மிகக்குறுகிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தாம். சாதாரண அரசியல்வாதிகள் போல அவர்களும், அதாவது சிவில் அமைப்புகளும் மக்கள் பழையவற்றை மிக இலகுவாக மறந்துவிடுவார்கள் என்று நம்புகின்றார்களோ தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தல் நடக்குமா நடக்காதா என்பது நீண்டகாலமாகவே கேள்விக்கு உரியதாக இருந்துவந்தபோதிலும், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஏதேனும் ‘மந்திரவித்தைகளை’ காட்டாவிட்டால், செப்ரெம்பரில் தேர்தல் நடந்துதான் ஆகவேண்டும் என்பது அரசமைப்பின் பிரகாரம் நடக்கவேண்டியதுதான்.

அதனால்தான், கடந்த பத்தொன்பது தேர்தலில் கடைசி நேரத்தில் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கு முயன்று தோற்றுப்போனது போல அல்லாமல், இந்தத் தடவை அதனை செயலுருவாக்க வேண்டும் என்று மக்கள் மனு வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் அதன் அவசியத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது. மக்கள்மனு சிவில் சமூகம் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு என்று மூன்று இடங்களிலும் கருத்தரங்குகளை நடத்தி அதற்கு மக்களின் ஆதரவு இருப்பதை அறிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே, வவுனியாவில் கூடிய சிவில் சமூகங்களும் பொது அமைப்புகளுமாக முப்பதுக்கும் அதிகமான அமைப்புக்ககள் சேர்ந்து பொதுச்சபையை உருவாக்கின.

அதாவது அந்த அமைப்பு தொடங்கப்பட்டதே ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்துத்தான் என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்ததுதான். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களம் இறக்குவதன் மூலம் மக்களை தேசமாக அணி திரட்டலாம் என்பது அதன் பிரதான இலக்காக இருந்தது என்பதும் விவாதத்துக்குரியதல்ல. ஆனால், பொதுச்சபையின் அறிக்கையில் சொல்லப்பட்டது போல, பொதுச் சபையை உருவாக்கிய பின்னர்தான், குறுகிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது என்பதல்ல. இங்கே எம் மத்தியில் எழுகின்ற கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி தமிழ் மக்களை தேசமாக திரட்டுவதற்கு முன்வந்த பொதுச்சபை, அவ்வாறு திரட்டிய மக்களை அடுத்து எப்படி வழி நடத்துவது என்பதைப்பற்றி யோசிக்காமல் விட்டது எதற்காக என்பதுதான் புரியமுடியாததாக இருக்கின்றது.

அதைவிட முக்கியமானது, இந்த ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி ரணில விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருந்தால் மாத்திரமே, பாராளுமன்றம் சில வேளைகளில் கலைக்கப்படாமல் இருந்திருக்கலாம். அல்லாமல் சஜித் பிரேமதாஸவோ, அனுரகுமார திசாநாயக்காவவோ வெற்றி பெற்றால் பாராளுமன்றத்தை நிச்சயம் கலைத்து தேர்தல் ஒன்றை நடத்துவார்கள் என்பதும் சிறுபிள்ளைக்கும் தெரிந்த சங்கதி. அப்படியிருக்கையில், ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களம் இறக்கி, தேசமாக தமிழ் மக்களை திரட்ட நினைத்த பொதுச்சபை, திரட்டிய மக்களை மீண்டும் ‘அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டைபோல’ அவிழ்த்துவிட்டு இன்று ஓரமாக ஒதுங்கியிருப்பது எதனால் என்பதுதான் புரியவில்லை. மக்கள்மனு சிவில் சமூகம் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்ற தலைப்பில் முதலாவது கருத்தமர்வை நடத்திய போது, அதிலே பேச்சாளராக கலந்துகொள்ளுமாறு விடுத்த அழைப்பை பொதுச் சபையின் முக்கிய பிரமுகர் ஒருவர் மறுத்திருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், ஒரு குறிப்பிட்ட புலம் பெயர் வர்த்தகர், பொதுவேட்பாளரை களம் இறக்கினால், சஜித் பிரேமதாஸவின் வெற்றியை அது தடுத்துவிடும் என்பதால் அப்படி செய்யவேண்டாம் என்று விரும்புகிறார், அதனால் நான் அந்த கருத்தமர்வில் பேசமுடியாது.’ இப்போதும் யாராவது பாராளுமன்றத் தேர்தலில் கலந்து கொள்ளவேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்களோ தெரியவில்லையே.!

-ஊர்க்குருவி.