இருநூற்று இருபது இலட்சம் பேரும் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளனர்- எதிர்க் கட்சித் தலைவர்

0
144

இருநூற்று இருபது இலட்சம் மக்களும் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, நாட்டில் சகலருக்கும் நிவாரணம் வழங்க வேண்டியது அவசியம் என்று, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நாட்டின் இருநூற்று இருபது இலட்சம் மக்களே அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றுவதையே அரசாங்கம் செய்ய வேண்டும்.

அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான அரச அதிகாரிகள் குழுவொன்றுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று பிரதமர் அலுவலகத்தின் ஊடாக முன்வைக்கும் நடவடிக்கையில் மொட்டுக்கட்சி துரிதமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தருணத்தில் அவ்வாறானதோர் செயலை மேற்கொள்ள ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.

தன்னிச்சையான முடிவினால் உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்துள்ளதோடு, இன்றும் அவர்களுக்கான நட்டஈடு வழங்கப்படவில்லை.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்நாட்டின் பிள்ளைகள் முறையான கல்வியை பெறவில்லை.

வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, இதுபோன்ற அரசியல் பழிவாங்கல்கள் என்ற போர்வையில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு சலுகைகள் வழங்கப்படுவதை நாம் எதிர்க்கின்றோம்.