இரு தேரர்கள் மீது தாக்குதல்;புத்தளத்தில் சம்பவம்!

0
91

புத்தளம் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் இரு தேரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

காயமடைந்த தேரர்கள் இருவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விகாரையானது ஒரு வருடத்திற்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்ட நாளில் இருந்து சில நபர்களால் இடையூறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த தேரர்கள் இடையூறுகள் மத்தியிலும் இந்த விகாரையில் தங்கியிருந்துள்ள நிலையில் விகாரையின் பங்களிப்பாளர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு காரணமாக குறித்த தேரர்கள் ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு சென்று மீண்டும் விகாரைக்கு திரும்பிய நிலையில் தேரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் கதவு உடைக்கப்பட்டு அவர்களது உடைமைகள் திருடப்பட்டிருந்துள்ளன.

இதனையடுத்து குறித்த தேரர்கள் இது தொடர்பில் புத்தளம் தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்து மீண்டும் விகாரையை நோக்கி சென்றுள்ளனர்.

இதன்போது இந்த விகாரைக்குள் நுழைந்த சந்தேக நபர்கள் சிலர் குறித்த தேரர்களை பலமாக தாக்கி அவர்களது காவி உடையை கழற்றிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.