இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (6) முதல் சந்தையில் விற்பனைக்காக விநியோகிக்கப்படும் என அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உப்பு இறக்குமதி காரணமாக உள்நாட்டு சந்தையில் உப்பின் விலை சற்று அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உப்பு இறக்குமதி நிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் உப்பின் விலை குறையும் எனவும் லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தன திலக கூறியுள்ளார்.
அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட உப்பு தட்டுப்பாடை நிவர்த்தி செய்வதற்காக 30,000 மெற்றிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி, கடந்த ஜனவரி 27ஆம் திகதி முதல் தொகுதியாக 1,485 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டது. 15 ஆண்டுகளில் இலங்கையில் உப்பு இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். மேலும், உப்பினை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடரும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.