இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு!

0
232

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் இடையே நேற்று மாலை நீண்ட நேரம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றதுடன், இந்தியத் தூதரகத்தின் சார்பில் துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல் துறை முதன்மை செயலாளர் திருமதி பானு பிரகாஷ் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
சந்திப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்ஷ்ங்கர் மற்றும் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி ஆகியோர் அடுத்த மாதம் இலங்கைக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் பற்றி பேசப்பட்டது.
அத்தோடு வடகிழக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி விரிவாக ஆராயப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினை தீர்வு சம்பந்தமாக தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் 13ம் திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு முறையை உருவாக்குவதாக இருந்தது.
இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்பண்ணுவதில் இந்தியா தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கின்ற அதேவேளையில் தொடர்ந்தும் இந்தியா அந்த பங்களிப்பை செய்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்தார்.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் பல விடயங்கள் தீர்க்கமாக ஆராயப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.