இலங்கைக்கு மேலும் 200 கோடி டொலர் கடன் வழங்குகிறது இந்தியா!

0
201

சீனாவை கருத்தில் கொண்டு இலங்கைக்கு மேலும் 200 கோடி டொலர்களை திறந்த கடனாக இந்தியா வழங்க முன்வந்துள்ளது என்று கூறப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அதன் முதல் கடனை திருப்பி செலுத்தாத நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் உணவு மற்றும் எரிசக்தி ஆகியவற்றை கடனாக கேட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் 200 கோடி டொலர் நிதி உதவியை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றும் இந்தக் கடன் உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட முக்கிய ஐந்து பொருட்களின் இறக்குமதி செய்ய வழங்கப்படும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சீனா கடன் வழங்க மறுத்துள்ள நிலையில், தனது செல்வாக்கை மீண்டும் உயர்த்தும் நோக்கில் இந்தியா கடன்களை வழங்குகிறது. இதுவரை 190 கோடி டொலர்கள் கடன்களை இந்தியா வழங்கியுள்ளது. இதில் நாணய பரிமாற்றமும் அடங்கும். இந்நிலையில் எரிபொருள் இறக்குமதிக்காக 50 கோடி டொலர்களை இலங்கை கேட்டுள்ளது.

இதேசமயம், சீனாவிடம் 130 கோடி டொலர் நிதி உதவியையும், 150 கோடி டொலர் மதிப்பிலான யுவான் நாணய இடமாற்றத்தையும் பெறுவதற்கு இலங்கை பேச்சு நடத்துகிறது.

ஆனால், இலங்கை சீனாவிடம் கடன் கேட்பதை குறைப்பதற்கு இந்தியா ஆர்வமாக உள்ளது. இலங்கைக்கு சீனா 350 கோடி டொலர்களை கடனாக அளித்துள்ளது. அத்துடன், நாட்டின் 10.8 வீதமான துறைமுகங்கள் மற்றும் வீதிகளை அமைத்துள்ளது. எனவே, சீனாவின் செல்வாக்கை இலங்கையில் குறைக்க புதுடில்லி விரும்புகிறது.

இதற்காக, கடனுக்கு அப்பால் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சீனி, அரிசி, கோதுமை அடங்கிய கப்பலையும் இந்தியா அனுப்பியுள்ளது. இலங்கை சீனாவில் தங்கியிருப்பதை குறைக்கவில்லை என்றபோதிலும், சீனாவின் நிபந்தனைகளை விட இந்தியா குறைந்த நிபந்தனைகளுடன் இலங்கைக்கு மேலும் கடன்களை வழங்கவும், உதவிப் பொருட்களை அனுப்பவும் முன்வந்துள்ளது – என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.