இலங்கைக்கு 50 அம்புலன்ஸ் வாகனங்களை வழங்க இந்தியாவின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டாடா குழுமம் முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘சுவசெரிய’ சேவைக்கே இந்த அம்புலன்ஸ்களை வழங்க டாடா குழுமத்தின் புதிய தலைவர் நடராஜா சந்திரசேகரன், சுவசெரிய நிறுவுநர் ஹர்ஷ டி சில்வாவிடம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
சுவசெரிய சேவையில் தற்போது 297 அம்புலன்ஸ்கள் உள்ளன.
இவற்றின் மூலம் ஒருநாளில் ஆயிரத்து 50 நோயாளிகளுக்கு சேவை வழங்க முடியும்.
சுவசெரிய மூலமாக நாளொன்றுக்கு 50 மனித உயிர்களை காப்பாற்ற முடிகிறது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். சுவசெரிய சேவைக்கு டாடா நிறுவனம் ஆரம்பத்தில் 2.3 கோடி டொலர்களை வழங்கியது. இந்த சேவையை நடத்துவதற்காக அரசாங்கம் 400 கோடி ரூபாயை செலவிடுகிறது. சுவசெரிய சேவையை தொழில்நுட்பத்துடன் உலகின் மிக வேகமான அம்புலன்ஸ் சேவையாக அறிமுகப்படுத்த முடியும் என உலக வங்கி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.