இலங்கையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் இந்தியா – தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் ஆகிய பிரிவுகளில் இவர்கள் தேடப்பட்டு வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22-ம் திகதி முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து தனுஸ்கோடி வழியாக அகதிகளாக தமிழகம் வந்தடைந்த இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 21-ம் திகதி, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இந்தியக் கடற்கரைக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், கடலோரக் காவல் படையினர், இலங்கைத் தமிழர்களை மீட்டு, மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில், ஆகஸ்ட் 21ஆம் திகதியன்று தமிழகத்துக்கு சென்றவர்களில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் இலங்கையில் குற்றங்களுக்காக தேடப்பட்டு வருபவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.