இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியின் சகோதரர் நடேசன் (வயது 92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய அரசை நம்பி, தாயகம் திரும்பியவர்களை இலங்கை அரசு கைது செய்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்.
தமிழகத்தில் இருந்து அல்லது இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளை பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.