இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையில் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் நடைபெற்ற AFC ஆசிய கிண்ண சவூதி அரேபியா 2027 தகுதிகாண் சுற்றில் முதலாம் கட்டப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கையின் அற்புதமான ஆட்டத்திறன் இப் போட்டியில் வெளிப்பட்ட போதிலும் குறைந்தது நான்கு நிச்சய கோல்கள் தவறவிடப்பட்டடதால் இலங்கைக்கு வெற்றிபெற முடியாமல் போனது.
இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருந்த இலங்கை அணிப் பயிற்றுநர் அப்துல்லா அல் முத்துய்ரி, முதல் பதினொருவர் அணியில் வெளிநாடுகளில் விளையாடிவரும் புலம்பெயர் இலங்கை வீரர்கள் பத்து பேரை களம் இறக்கினார்.
அணித் தலைவர் சுஜான் பெரேரா மாத்திரமே உள்ளூர் வீரராக அணியில் இடம்பெற்றார்.
ஆட்டத்தின் முதலாவது பகுதியில் இலங்கை அணியினர் அற்புதமான பந்து பரிமாற்றங்களுடன் கம்போடிய கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர்.
ஆனால், கோல் போட கிடைத்த வாய்ப்புகளை அனுஜன் ராஜேந்த்ரம், வேட் டெக்கர் ஆகியோர் அடுத்தடுத்து தவறவிட்டனர்.
இடைவேளையின் பின்னர் இலங்கை அணியினர் சற்று சோர்வாக விளையாடியதை அவதானிக்க முடிந்தது.
போட்டியின் 67ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த வசீம் ராஸீக், அடுத்த நிமிடத்திலேயே கோலை நோக்கி உதைத்த பந்தில் போதிய பலம் இல்லாததால் கம்போடிய கோல் காப்பாளர் விரோக் தடரா இலகுவாக தடுத்தார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் சமுவெல் டுரன், மேலும் ஒரு சந்தர்ப்த்தில் ஆதவன் ராஜமோகன் ஆகிய இருவரும் கோல் போட எடுத்த முயற்சிகள் மயிரிழையில் தவறிப் போயின.
மறுபக்கத்தில் கம்போடிய அணியினர் போட்டியின் கடைசிக் கட்டத்தில் இலங்கை கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர். ஆனால் அவர்களாலும் கோல் போட முடியாமல் போனது
ஒட்டுமொத்தத்தில் இந்தப் போட்டியை இரசிகர்கள் பெரு உற்சாகத்துடன் கண்டு களித்ததுடன் இலங்கை வீரர்களை உற்சாகப்படுத்தியதன் மூலம் இலங்கையில் கால்பந்தாட்ட ஆர்வம் குறையவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை, இந்தப் போட்டி முடிவையிட்டு திருப்தி அடைவதாக பயிற்றுநர் அப்துல்லா அல் முத்தய்ரி, போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.
‘இலங்கை அணியினர் கடைசியாக பூட்டானிடம் தோல்வி அடைந்திருந்தனர். ஆனால், கம்போடியாவுடனான போட்டி வெற்றிதோல்வியின்றி முடிந்ததன் மூலம் இலங்கை அணியினரின் முன்னேற்றம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நான் இலங்கை அணியின் பயிற்றுநராக பதவியேற்று 15 நாட்களே ஆகிறது. சர்வதேச அரங்கில் அணியைக் கட்டியெழுப்ப இந்தக் காலப்பகுதி போதுமானதல்ல. எனினும் இந்த முடிவு எனக்கு திருப்தி அளித்தது போல இலங்கை இரசிகர்களை திருப்தி அடையச் செய்திருக்கும் என நான் நம்புகிறேன்.
‘சொந்த மண்ணில் கம்போடியாவை வெற்றிகொள்ள முடியாமல் போனது இலங்கை அணிக்கு சிறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில் கம்போடியாவில் 120 நிமிடங்கள் விளையாட வேண்டிவரலாம் என்பதை நினைவில் நிறுத்தி விளையாட வேண்டிவரும். கம்போடியாவில் நடைபெறவுள்ள போடடியும் கோல்களின்றி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் போடடி;யில் மேலதிக நேரம் வழங்கப்படும். கம்போடியாவை அதன் சொந்த மண்ணில் வெற்றிகொள்வது கடினமான விடயம். இரண்டாம் கட்டப் பொட்டி இன்னும் 5 தினங்களில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் இலங்கை வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்’ என்றார்.
உள்ளூரில் அதிசிறந்த முன்கள வீரராக முன்னேறிவரும் மொஹமத் ஆக்கிபை மாற்றுவீரராக களம் இறக்காததற்கு காரணம் உள்ளதா என அவரிடம் கேட்டபோது,
‘சில வீரர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய போட்டியில் சில வீரர்கள் உபாதைக்குள்ளானதுடன் சிலருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆக்கிப் ஒரு சிறந்த வீரர் என்பதை அறிவேன். ஆனால் அவரை அடுத்த போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் வைத்திருக்க வேண்டும் என நான் எண்ணினேன். ஏனேனில் கம்போடியாவில் இலங்கை அணியினர் பலத்த சவாலை எதிர்கொள்ள வேண்டிவரும்’ என்றார்.
இது இவ்வாறிருக்க, இன்றைய போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது தமக்கு சாதகமாக அமையும் என கம்போடியா பயிற்றுநர் பீலிக்ஸ் ஒகஸ்டஸ் டல்மாஸ் தெரிவித்தார்.
சொந்த மண்ணில் வெற்றியை ஈட்டிக்கொடுத்து கம்போடியா மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை சார்பாக சுஜான் பெரேரா (தலைவர் – கோல்காப்பாளர்), அனுஜன் ராஜேந்த்ரன், வேட் டெக்கர், ஒலிவர் ஜேம்ஸ், சமுவல் டுரன்ட், மணிமெல்துர லியொன், குளோடியஸ் மெத்தியாஸ், சுரேஷ் அன்தனி, ஜெக் ஹிங்கேர்ட், ஆதவன் ராஜமோகன், ஜேசன் தயாபரன் ஆகியோர் முதல் பதினொருவர் அணியில் இடம்பெற்றனர்.
மாற்று வீரர்களாக வசீம் ராஸீக், நிக்கலஸ் ஹர்ஷ பெர்னாண்டோ, எஸ். ஸ்டீவன், ரிப்கான் மொஹமத் ஆகியோர் பயன்படுத்தப்பட்டனர்.