கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் உரிமையை சர்வதேச மட்டத்தில் போராட்டங்களை மேற்கொண்டு பெற்றுக்கொள்ள முயற்சிப்பதில் தவறு இல்லை.
ஆனால் இதனைக் காரணமாகக்கொண்டு இலங்கைக்கு சர்வதேச ரீதியில் தடைகளை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் நோக்கமாக இருக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கொரோனாவால்; மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால் சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுகின்றன எனத் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் எந்தவித விஞ்ஞான ரீதியிலான ஆதாரமும் இல்லை.
இதனை உலக சுகாதார அமைப்பு உட்பட சர்வதேச ரீதியில் 190 இற்கும் மேற்பட்ட நாடுகள் அனுமதித்திருக்கின்றன. இலங்கை அரசாங்கம் அதனை அனுமதிக்காமல் சுகாதாரத் துறையின் மீது சாட்டிவிட்டு காலம் கடத்தி வருகின்றது.
அத்துடன் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதென்பது முஸ்லிம்களின் மத அடிப்படையிலான உரிமையாகும். அதனைப் பெற்றுக்கொள்ள எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம். எனவே சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்குத் தடைகளை விதிப்பதற்கு முஸ்லிம்கள் முயற்சிக்க கூடாது.
ஏனெனில் எதிர்காலத்தில் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் பாதிப்பு ஏற்பட்டால் அதனால் இங்கு வாழக்கூடிய முஸ்லிம்களுக்கும் அதன் பாதிப்பு ஏற்படுவதுடன் சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் சமூகம் என்றவகையில் எமக்கு அவப்பெயர் ஏற்படும்.
அதனால் எமது உரிமையைப் பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும். மாறாக இலங்கையை சர்வதேச ரீதியில் சிக்கவைப்பது எமது நோக்கமாக இருக்கக்கூடாது எனத் தெரிவித்தார்.