இஸ்ரேலுக்கு எதிராக ஐ. நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

0
54

ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காஸா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.

காஸா மீது குண்டு மழை பொழிந்து வரும் இஸ்ரேலின் தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

பலர் தங்கள் வீடுகள் உடைமைகளை இழந்து நிர்க்கதியாய் தவிக்கிறார்கள். ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டும் வரை போர் ஓயாது எனக் கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தொடர்ந்து தாக்குதல் நடத்த படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் ஐ. நா. பொதுச் சபையில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானம் ஐ. நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. “பலஸ்தீன பிரச்னைக்கு அமைதியான தீர்வு” என்ற பெயரிலான தீர்மானத்தை செனகல் நாடு முன்மொழிந்தது.

விவாதத்துக்கு பின்னர் இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது, இந்தியா குறித்த தீர்மானத்துக்கு ஆதரவாக தனது வாக்கை செலுத்தியது.

இந்தியா தவிர்த்து மேலும் 156 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இஸ்ரேல், ஆர்ஜென்ரீனா, ஹங்கேரி உட்பட 8 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நிலையில், உக்ரைன், கேமரூன் உள்ளிட்ட 7 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.