ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க விமானங்கள் நேற்றுத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலகில் வேறு எந்த இராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரமாகும் எனவும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், ஈரான் நாடும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு ஒக்ரோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் இதற்கு பதிலடி கொடுத்தது.
இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ஒப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனிடையே ஈரான் தலைநகரிலிருந்து மக்களை வெளியேறும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய மக்களை அறிவுறுத்தியுள்ளன. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. இதுபற்றி ட்ரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம்.
ஈரான் நாட்டின் வான்வெளிக்கு வெளியே அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பர்தவின் முக்கிய தலங்கள் மீது முழு அளவில் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளோம். இதனைத் தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பிவிட்டன.
அமெரிக்காவின் சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த இராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரமாகும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி என தெரிவித்துள்ளார்.