உடனடி போர் நிறுத்தம் தேவை; இந்திய பிரதமர் மோடி கடிதம்

0
30

“பலஸ்தீனத்தில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அனைத்துவித தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வரவேண்டும். பலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்”- இவ்வாறு பலஸ்தீனத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, அந்த நாட்டு அரசுக்கு மோடி எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்களின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை தெரிவிக்கும். பலஸ்தீனத்தில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். பணயக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

அனைத்துவிதமான தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வரவேண்டும். காஸாவில் இடம்பெறும் மோதல், உயிரிழப்பு – சோகத்தை பலஸ்தீன மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

அங்கு தற்போது நிலவும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலை குறித்து இந்தியா மிகுந்த கவலை கொள்கிறது. பலஸ்தீனத்தில் நீடித்த மற்றும் அமைதியான தீர்வு ஏற்பட தூதரக அளவிலான பேச்சுகள்தான் தீர்வு என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது.

இருதரப்பு பேச்சுகள் மூலமான தீர்வு, இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான பலஸ்தீனம், இஸ்ரேலுடன் இணைந்து அமைதியாக வாழ்வதை இந்தியா ஆதரிக்கிறது.

பலஸ்தீனத்தின் வளர்ச்சிக்கு இந்தியா துணை நிற்கும். மக்களின் தேவைகள் அடிப்படையில், மக்கள் மைய திட்டங்களை அமுல்படுத்துவதிலும் பலஸ்தீன மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்- இவ்வாறு பிரதமர் மோடி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்தக் கருத்தை புதுடில்லியில் உள்ள பலஸ்தீன தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.