உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை காலை 10 மணியுடன் நிறைவடைவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை காலை 10 மணிக்குள் வெளியிடவில்லையாயின் தான் வெளித் தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஓய்வு பெற்ற நீதியரசர்களான எஸ்.ஐ.இமாம் மற்றும் ஏ.என்.ஜே.அல்விஸ் ஆகியோர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைகள் இரண்டும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஊடக சந்திப்பை நடத்திய பிவிதுரு ஹெல உறுமயக் கட்சியின் தலைவர் உதயகம்மன்பில அந்த அறிக்கைகள் தன்னிடம் இருப்பதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அந்த அறிக்கைகளை மக்களுக்கு வெளிப்படுத்தவில்லையாயின் தான் வெளியிடத் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித்த ஹேரத் அந்த அறிக்கை எவ்வாறு உதய கம்மன்பிலவுக்கு கிடைக்கப்பெற்றது என விசாரிப்பதாகவும் அவர் அந்த அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க 3 நாள் கால அவகாசம் வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய பின்னணியில் ஜனாதிபதி அந்த அறிக்கைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவில்லையாயின் தான் அந்த அறிக்கைகைளை நாளை வெளியிடவுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.